Published : 27 May 2018 09:38 AM
Last Updated : 27 May 2018 09:38 AM

துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஒருவரைப் பிடித்து போலீஸார் விசாரணை

தூத்துக்குடியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மிரட்டல் விடுத்தவரைப் பிடித்து, சைபர் கிரைம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் தொடர் போராட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கடந்த செவ்வாய் அன்று போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். மறுநாளும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில், 13 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 8.47 மணிக்கு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு (மாநில காவல் கட்டுப்பாட்டு அறை) செல்போனில் இருந்து அழைப்பு ஒன்று வந்தது. எதிர் முனையில் பேசிய ஆண் நபர் ஒருவர், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த யார் உத்தரவிட்டது, நீங்கள் ஏன் துப்பாக்கிச் சூடு நடத்தினீர்கள் என்று சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார். அதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் நாளைக்குள் வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி இணைப்பைத் துண்டித்து விட்டார்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த காவல் கட்டுப்பாட்டு அறை போலீஸார் உடனடியாக இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக மிரட்டல் அழைப்பு வந்த எண் பற்றி சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், மிரட்டல் விடுத்தது மதுரை பேரையூரைச் சேர்ந்த மாரியப்பன் என்பது தெரியவந்தது. சென்னையில் இருந்து விரைந்து சென்ற தனிப்படை போலீஸார் மாரியப்பனைப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x