Published : 20 May 2018 03:23 PM
Last Updated : 20 May 2018 03:23 PM

அனைத்துக் கட்சிக் கூட்டம் தேவையா?- முதல்வர் பழனிசாமி பதில்

 

காவிரி விவகாரத்தில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை ஜெயலலிதாவின் அரசு பெற்றுத் தந்திருக்கின்றது என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:

''தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். 1986 ஆம் ஆண்டு மத்திய அரசை வலியுறுத்தியதன் அடிப்படையில், காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. அந்தக் காவிரி நடுவர் மன்றம் 205 டி.எம்.சி. வழங்க வேண்டும் என்று இடைக்கால தீர்ப்பு ஒன்றைக் கொடுத்தது, அதற்குப் பிறகு 2007-ல் நடுவர் மன்றத்தினுடைய இறுதி தீர்ப்பு வந்தது, இதில் 192 டி.எம்.சி ஆக நமக்கு வழங்கவேண்டுமென்று அந்த உத்தரவிலே கூறப்பட்டது. அப்பொழுது, மத்திய அரசு அதை அரசிதழிலே வெளியிடப்படாத காரணத்தினாலே, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்திலே வழக்கு தொடர்ந்தார். 2011-ல் நடுவர் மன்ற ஆணையம் அளித்த தீர்ப்பை மத்திய அரசிதழிலே உடனடியாக வெளியிடப்படவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது. அந்த ஆணையின்படி மத்திய அரசு அரசிதழிலே வெளியிடப்பட்டது.

பிறகு அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தினார். ஆனால், அதை மத்திய அரசு கிடப்பிலே போட்டது. ஜெயலலிதா மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுகி அப்பொழுது போட்ட பல வழக்குகள்தான் இப்பொழுது தீர்ப்பாக கூறப்பட்டிருக்கின்றது. அந்த தீர்ப்பிலே தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார்கள், காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு முழு அதிகாரம் இருக்கிறது என்று தெளிவாக குறிப்பிட்டிருக்கின்றார்கள். ஏற்கெனவே, நடுவர் மன்ற ஆணையத்தில் என்ன தீர்ப்பு வழங்கப்பட்டதோ, அந்தத் தீர்ப்பின் அடிப்படையில் செயல்பட வேண்டும் என்று தெளிவாக சொல்லியிருக்கின்றார்கள்.

அதிலே நமக்கு 14.75 டி.எம்.சி. தான் குறைக்கப்பட்டிருக்கின்றது. மற்றவையெல்லாம் அதில் என்னென்ன அம்சங்கள் குறிப்பிட்டிருக்கின்றதோ, அத்தனையையும் கடைபிடிக்க வேண்டும் என்றுதான் உச்சநீதிமன்றம் தெளிவாக சொல்லியிருக்கின்றது. 10 நாட்களுக்கு ஒருநாள் கணக்கிட்டு, அந்த நீரினை வழங்க வேண்டுமென்று தெளிவாக சொல்லியிருக்கின்றார்கள். ஆகவே, ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை ஜெயலலிதாவின் அரசு பெற்றுத் தந்திருக்கின்றது. நம்முடைய வழக்கறிஞர் ஆணித்தரமான வாதங்களை உச்ச நீதிமன்றத்தில் எடுத்துவைத்ததன் வாயிலாக, இன்றைக்கு பல ஆண்டுகளாக, 32 ஆண்டுகளாக நடைபெற்றிருந்த காவிரி நதிநீர் பிரச்சினை இப்பொழுது தீர்வு காணப்பட்டிருக்கின்றது. அதுமட்டுமல்ல, உச்ச நீதிமன்றம், வருகின்ற பருவகாலங்களுக்குள் அதையெல்லாம் ஆணையத்தை அமைத்து அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருக்கின்றது. நீண்ட நெடிய ஆண்டுகாலமாக நடைபெற்ற பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து, விவசாயிகளுக்கும், தமிழ்நாடு மக்களுக்கும் நல்ல ஒரு தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கின்றது''.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

அப்போது, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தெளிவாக இருப்பதால், அனைத்துக் கட்சிக் கூட்டம் தேவையில்லையா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, ''அப்படி கிடையாது, ஒவ்வொருவருக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது, அதை நாம் எப்படி சொல்லமுடியும்? நீதிமன்றம் தான் நமக்கு இறுதி, நீதிமன்றம் இறுதியான தீர்ப்பை கொடுத்திருக்கின்றது. அதற்குமேல், சந்தேகத்தை எழுப்பிக் கொண்டேயிருந்தால், அதை யார்தான் முடிவு செய்வது? நீதிமன்றம் தான் இறுதியானது, நிதீமன்றத்தை நம்பித்தான் ஆகவேண்டும். ஆகவே, நீதிமன்றத்தை நாம் நாடினோம், இதற்கு முன் திமுக நாடியது, நாமும் நாடினோம், தொடர்ந்து அந்த வழக்கு நடத்திக் கொண்டிருந்தோம். சட்டப் போராட்டத்தின் மூலமாக ஒரு நல்ல தீர்ப்பை உச்ச நீதிமன்றத்தின் மூலமாக ஜெயலலிதா அரசு பெற்றுத் தந்திருக்கின்றது. அதில் எல்லா அம்சங்களும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. ஒருசில கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் தனக்குள்ள பாணியிலே பேசுகிறார்கள், அதற்கு நாங்கள் எப்படி விளக்கம் சொல்ல முடியும்? ஆகவே, அந்த நீதிமன்றத்தின் தீர்ப்பை அவர்கள் படித்துப் பார்த்து புரிந்து கொண்டால் நன்றாக இருக்கும் என்று கருதுகிறேன்'' என்று தெரிவித்தார்.

 

இதை மிஸ் பண்ணாதீங்க:

 

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x