அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய் பாதிப்பு குறித்த பரிசோதனை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Updated on
1 min read

ஈரோடு: இந்த ஆண்டு அனைத்து மாவட்டங்களிலும், புற்றுநோய் பாதிப்பு குறித்த பரிசோதனைகள் நடத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

ஈரோடு அரசு மருத்துவமனையில் கட்டணப் படுக்கை அறை சிகிச்சை வசதியைத் தொடங்கி வைத்து, மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் கட்டணப் படுக்கை அறைகள் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 16 மாவட்டங்களில் கட்டணப் படுக்கை அறை வசதிஏற்படுத்த முடிவு செய்து, கோவை,மதுரை, சேலம் ஆகிய மூன்றுமாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, ஈரோடு அரசு மருத்துவமனையில் கட்டணம் செலுத்தி சிகிச்சை பெறும் வகையில் 20 படுக்கை அறைகள் திறக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் ஈரோடு, ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்டங்களில் சாயக்கழிவு, தோல் தொழிற்சாலை,ரப்பர் உற்பத்தி கழிவுகளால், புற்றுநோய் பாதிப்பு அதிகம் இருப்பதாக சொல்லப்பட்டது. இந்த 4மாவட்டங்களில், 4.19 லட்சம்பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், 176 பேருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதில், ஈரோடு மாவட்டத்தில், 50 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டு அனைத்து மாவட்டங்களிலும், புற்றுநோய் பாதிப்பு குறித்த பரிசோதனைகள் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in