பா.ரஞ்சித், ஆம்ஸ்ட்ராங் மனைவி உட்பட 1,500 பேர் மீது வழக்குப் பதிவு

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆம்ஸ்ட்ராங் மனைவி உட்பட 1,500 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த மாதம் 5ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கில் இதுவரை 22 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி கேட்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆனந்தன் தலைமையில், கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் உட்பட ஏராளமானோர் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆனந்தன், கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியுமான பொற்கொடி, தேசிய ஒருங்கிணைப்பாளர் அசோக் சித்தார்த், திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித், சமத்துவப் படை நிறுவனர் சிவகாமி உட்பட 1,500 பேர் மீது 2பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in