Published : 21 May 2018 08:20 AM
Last Updated : 21 May 2018 08:20 AM

டயர் வெடித்ததால் கோர விபத்து; தேனி அருகே வேன்-கார் மோதல்- 4 பேர் பலி

தேனி அருகே கார், வேன் நேருக்கு நேர் மோதியதில் 2 பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள எம்.கல்லுப்பட்டியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் தேனி அல்லி நகரில் நடைபெற்ற சுப நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு நேற்று பிற்பகல் வேனில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

ஆண்டிபட்டி அருகே திம்மரசநாயக்கனூர் கணவாய் மலைப் பகுதியில் சென்றபோது, எதிரே மதுரையில் இருந்து வந்த காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார் வேன் மீது மோதியது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த க.விலக்கு அருகே அரப்படிதேவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜெயலட்சுமி(42), சுசித்ரா(19), வேனில் வந்த ராமர்(21), செல்லமுத்து(29) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் வேனில் இருந்த சிலர் தூக்கி வெளியே வீசப்பட்டனர். இதில், 27 பேர் காயமடைந்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஆண்டிபட்டி போலீஸார் காயமடைந்தவர்களை மீட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தேனி ஆட்சியர் பல்லவி பல்தேவ் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

காயமடைந்தவர்களில் துரைப்பாண்டி, ரமேஷ்குமார், ஆண்டவர் உள்ளிட்ட 4 பேர் கவலைக்கிடமான நிலையில் இருந்ததால் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்து குறித்து ஆண்டிபட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x