Published : 11 Aug 2014 10:21 AM
Last Updated : 11 Aug 2014 10:21 AM

தமிழில் படித்தோருக்கான சிறப்பு இடஒதுக்கீடு அட்டவணைக்கு எதிரான மனு தள்ளுபடி

தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 20 சதவீத சிறப்பு ஒதுக்கீட்டை செயல்படுத்துவது தொடர்பான அட்டவணையை எதிர்த்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நெல்லை கீழக்கலங்கல் கிராமத்தைச் சேர்ந்த எஸ். கோமதிநாயகம், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

நான் பட்டப்படிப்பை தமிழில் படித்து தேர்ச்சி பெற்றேன். கடந்த 2010-ம் ஆண்டில் குரூப் 2 தேர்வு எழுதினேன். தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் 20 சதவீத சிறப்பு இடஒதுக்கீடு வழங்கி அரசாணை பிறப்பித்தது. இந்த சிறப்பு இட ஒதுக்கீட்டை எப்படி செயல் படுத்த வேண்டும் என்பதற்கு தனி அட்டவணை உருவாக்கப் பட்டுள்ளது. அந்த அட்டவணை தவறாக உள்ளது. இதனால், தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் சிறப்பு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற அரசாணையின் நோக்கம் நிறைவேறவில்லை. எனவே, சிறப்பு இட ஒதுக்கீடு அரசாணை யின் நோக்கம் நிறைவேறும் வகையில் புதிய அட்டவணையை வெளியிட உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப் பட்டிருந்தது.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, டிஎன்பிஎஸ்சி அதிகாரி நேரில் ஆஜராகி, சிறப்பு இடஒதுக்கீடு எப்படி செயல்படுத்தப்பட வேண்டும் என்ற அட்டவணை தவறாக இருப்பதாகவும், புதிய அட்டவணை வெளியிட அவகாசம் வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அதன்படி, புதிய அட்டவணை கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி எஸ்.நாகமுத்து முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் சு.விஸ்வலிங்கம் வாதிடும்போது, இந்த வழக்கை முன்பு விசாரித்த நீதிபதி, முந்தைய அட்டவணைப்படி நடைபெற்ற நியமனங்கள், இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்படும் என உத்தரவிட்டார். எனவே, புதிய அட்டவணைப்படி மனுதாரருக்கு பணி வழங்க வேண்டும் என்றார்.

அதை ஏற்க மறுத்த நீதிபதி, புதிய அட்டவணை 2014 ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் புதிய அட்டவணை இனிவரும் நியமனங்களுக்குதான் பொருந்தும். 2010 நியமனங்களுக்கு பொருந்தாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x