“இயந்திரத்தனமாக செயல்பட்டு சொத்துகளை பதிவு செய்ய மறுக்கக் கூடாது” - சார் பதிவாளர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு

“இயந்திரத்தனமாக செயல்பட்டு சொத்துகளை பதிவு செய்ய மறுக்கக் கூடாது” - சார் பதிவாளர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு
Updated on
1 min read

மதுரை: சார் பதிவாளர்கள் இயந்திரத்தனமாக செயல்பட்டு சொத்துகளை பதிவு செய்ய மறுக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்த வி.வரததேசிகாச்சாரியர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘என் சொத்து தொடர்பான வழக்கில் முன்சீப் நீதிமன்றம், சார்பு நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தில் எனக்கு ஆதரவான உத்தரவு வந்துள்ளது. எதிர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுக்கள் தள்ளுபடியானது. இதையடுத்த நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சொத்தை பதிவு செய்யக்கோரி முறப்பாடு சார் பதிவாளரிடம் மனு அளித்தேன். சொத்தின் உண்மை நகல் இல்லை என்று கூறி பதிவு செய்ய மறுத்து சார் பதிவாளர் 25.6.2024-ல் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்து என் சொத்தை பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்’ எனக் கோரி இருந்தார்.

இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆயிரம் கே.செல்வகுமார் வாதிட்டார் இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, “நீதிமன்ற உத்தரவு நகல்கள் இருந்தும் சொத்தின் உண்மை ஆவணங்கள் இல்லை என்று கூறி சொத்தை பதிவு செய்ய சார் பதிவாளர் மறுத்துள்ளார். சார் பதிவாளரின் இந்த உத்தரவு நீதிமன்றத்துக்கு கீழ்படியாமையே தவிர வேறு ஒன்றும் இல்லை. நீதிமன்ற உத்தரவு இருந்தும் சொத்தின் உண்மை ஆவணங்களை சார் பதிவாளர் கேட்டுள்ளார். சார் பதிவாளர் மேல்முறையீட்டு நீதிமன்றம் போல் செயல்பட முடியாது. சார் பதிவாளரின் செயல் நீதிமன்ற அவமதிப்பாகும்.

இதே சார் பதிவாளர் எதிர்காலத்தில் இப்படி நடந்தால் கண்டிப்பாக நீதிமன்ற அவமதிப்பை சந்திக்க வேண்டியது வரும். சார் பதிவாளர்கள் தன்னிச்சையாக செயல்பட்டு சொத்துகளை பதிவு செய்ய மறுக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் அடிப்படையில் பதிவுத்துறை ஐஜி 12.7.2024-ல் சுற்றறிக்கை பிறப்பித்துள்ளார். அதில் சார் பதிவாளர்கள் இயந்திரத்தனமாக செயல்பட்டு பதிவு செய்ய மறுக்கக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது. இதனால் மனுதாரரின் சொத்தை பதிவு செய்ய மறுத்து சார் பதிவாளர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. ஒரு வாரத்தில் சொத்தை பதிவு செய்ய வேண்டும்” என உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in