Published : 08 May 2018 09:13 AM
Last Updated : 08 May 2018 09:13 AM

‘நீட்’ போலி நுழைவுச் சீட்டு: இணையதள மையம் மீது புகார்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சிங்காளந்தபுரம் காலனி சாலை காமராஜ் நகரைச் சேர்ந்தவர் எம்.நவரத்தினராஜ். இவரது மகள் ஜீவிதா. இவர் மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வு (நீட்) எழுத நேற்று முன்தினம் சேலம் கொண்டலாம்பட்டி பைபாஸ் அருகேயுள்ள தனியார் கல்லூரிக்கு சென்றார்.

அவரது நுழைவுச் சீட்டை சிபிஎஸ்இ அதிகாரிகள் சோதனை செய்து, போலி நுழைவுச் சீட்டு எனக் கூறி தேர்வு எழுத அனுமதிக்கவில்லை.

இவருக்கு கேரள மாநிலம் கோட்டையத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினர். இதனால் மாணவி ஜீவிதா கடும் மன உளைச்சலுக்கு ஆளானார்.

நுழைவுச் சீட்டு குளறுபடி தொடர்பாக ஜீவிதாவின் தந்தை நவரத்தினராஜ், ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:

கடந்த மார்ச் மாதம் ராசிபுரம் அண்ணா சாலையில் உள்ள அரசு ஒப்புதல் பெற்ற இணையதள சேவை மையத்தில் எனது மகள் ஜீவிதா நீட் தேர்வுக்கு விண்ணப்பம் செய்தார்.

கடந்த 2-ம் தேதி மையத்தின் உரிமையாளர் கலைச்செல்வி ஜீவிதாவுக்கு நுழைவுச் சீட்டு தந்துள்ளார். அதில், சேலம் கொண்டலாம்பட்டி தனியார் கல்லூரி என தேர்வு மையம் குறிப்பிடப்பட்டிருந்தது.

நேற்றுமுன்தினம் சேலத்தில் உள்ள மையத்துக்கு தேர்வு எழுத ஜீவிதா சென்றார். அப்போது நுழைவுச் சீட்டு போலி என, கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

போலி நுழைவுச் சீட்டு வழங்கிய இணையதள சேவை மைய உரிமையாளர் கலைச்செல்வி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x