திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் மழை: செம்பரம்பாக்கம் ஏரிக்கு விநாடிக்கு 577 கன அடி நீர்வரத்து

செம்பரம்பாக்கம் ஏரி
செம்பரம்பாக்கம் ஏரி
Updated on
1 min read

திருவள்ளூர்: திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நேற்று இரவு (ஞாயிற்றுகிழமை) முதல் பெய்து வரும் மழையால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர்வரத்து விநாடிக்கு 577 கன அடியாக இருக்கிறது.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. லேசான, மிதமாக பெய்து வரும் இம்மழையால், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள சென்னை குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளுக்கு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து மழைநீர் வந்து கொண்டிருக்கிறது.

அம்மழைநீர், இன்று (ஆக.5) காலை நிலவரப்படி, செம்பரம்பாக்கம் ஏரிக்கு என, விநாடிக்கு 577 கன அடி வந்துக்கொண்டிருக்கிறது. அதே போல், பூண்டி ஏரிக்கு விநாடிக்கு 110 கன அடி, புழல் ஏரிக்கு விநாடிக்கு 68 கன அடி, கண்ணன்கோட்டை- தேர்வாய் கண்டிகை ஏரிக்கு விநாடிக்கு 15 கன அடி என, மழை நீர் வந்து கொண்டிருக்கிறது.

ஆகவே 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் இருப்பு 1,441 மில்லியன் கன அடியாகவும், 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியின் நீர் இருப்பு, 83 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. அதே போல், 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீர் இருப்பு 2,513 மில்லியன் கன அடியாகவும், 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை- தேர்வாய் கண்டிகை ஏரியின் நீர் இருப்பு 303 மில்லியன் கன அடியாகவும் இருக்கிறது என, நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in