சென்னை, குமரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை, குமரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் பிற்பகல் 1 மணி வரை சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 5) ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

குறிப்பாக, சென்னையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில் நேற்று மாலை சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அதன் பின்பு சற்று மழை ஓய்ந்த நிலையில் நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி விடியற்காலை 5 மணி வரை பெய்தது.

இந்நிலையில், தமிழகத்தில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, குமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் ஆகிய 8 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில், இரவு முதல் மழை பெய்து வருவதால், சில இடங்களில் தண்ணீர் தேங்கியிருப்பதால் மக்கள் சிரமத்துக்கு ஆளாகியிருக்கின்றனர். அதோடு சில பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in