Published : 03 Aug 2014 10:00 AM
Last Updated : 03 Aug 2014 10:00 AM

தமிழ்நாடு பார் கவுன்சிலில் வழக்கறிஞர் பதிவு நிறுத்தம்: புகார் வந்ததால் உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னையில் உள்ள தமிழ்நாடு பார் கவுன்சிலில் வழக்கறிஞர்கள் பதிவு முறைப்படி நடக்கவில்லை என்று புகார் மனு வந்ததைத் தொடர்ந்து, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில், வழக்கறிஞர் பதிவு நிறுத்தப்பட்டது. இதனால் பதிவு செய்ய வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

விருதுநகரை சேர்ந்த எஸ்.எம்.ஆனந்த முருகன் என்பவர் உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார். ‘‘தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலில் ஆகஸ்ட் 2-ம் தேதி (சனிக்கிழமை) 900-க்கும் மேற்பட்டோர் வழக்கறிஞர்களாக பதிவு செய்ய உள்ளனர். வழக்கறிஞர் பதிவுக்கான நடவடிக்கை முறையாக நடைபெறவில்லை. குற்றப் பின்னணி உள்ள பலரும் வழக்கறிஞர்களாக பதிவு செய்யப்பட உள்ளனர். எனவே, அன்று நடக்கவுள்ள வழக்கறிஞர் பதிவு நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்’’ என்று அதில் கோரியிருந்தார்.

இதை நீதிபதி என்.கிருபாகரன் விசாரித்து, பார் கவுன்சிலில் சனிக்கிழமை நடைபெறும் வழக்கறிஞர் பதிவு நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் அருகே உள்ள பார் கவுன்சில் அலுவலகத்துக்கு சனிக்கிழமை காலை ஏராளமானோர் தங்களை வழக்கறிஞர்களாக பதிவு செய்துகொள்ள வந்தனர். அவர்களிடம் உயர் நீதிமன்ற உத்தரவு காரணமாக வழக்கறிஞர் பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பார் கவுன்சில் நிர்வாகிகள் தெரிவித்தனர். இதனால் ஏமாற்றம் அடைந்த அவர்கள் பார் கவுன்சில் எதிரே என்.எஸ்.சி. போஸ் சாலையில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பார் கவுன்சில் நிர்வாகிகள் அவர்களை சமாதானப்படுத்தினர்.

இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தை அணுகி உரிய தீர்வு பெறுவோம் என்று தமிழ்நாடு – புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் டி.செல்வம் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x