தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
Updated on
1 min read

தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் வலுவான தரைக்காற்று 30 முதல் 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, கடலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் ஒருசில இடங்களில் 6, 7-ம் தேதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழையும், 8, 9, 10-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

திருவள்ளூர், செங்கல்பட்டில் 4 செ.மீ மழை நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி, திருவள்ளூர், செங்கல்பட்டில் 4 செ.மீ., புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கம், சென்னை ஆலந்தூர், சென்னை விமான நிலையம், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை, கோமுகி அணை, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் 3 செ.மீ., செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர், சென்னை பள்ளிக்கரணை, காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in