Published : 14 May 2018 01:08 PM
Last Updated : 14 May 2018 01:08 PM

1300 டாஸ்மாக் கடைகள் மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு: தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

தமிழகத்தில் 1300 டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தமிழகத்தில் நகர எல்லையில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக மாற்றாமல் அவற்றுக்கு அருகே டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு செயல்படுவதாக வழக்கறிஞர் கே.பாலு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் செயல்படும் டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட உத்தரவிட்டது. இதனால் தமிழகம் முழுவதும் சுமார் 1300 டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு மூடியது.

1300 டாஸ்மாக் கடைகளை மூடும் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. மேலும், நெடுஞ்சாலையில் இருந்து டாஸ்மாக் கடைகள் அமைந்துள்ள தூரத்தை தனித்தனியாக கணக்கிட்டு, அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

டாஸ்மாக் அமைப்பது குறித்த தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? எந்த மாதிரியான இடங்களில் அமைக்கப்படுகிறது என்பதையும் தமிழக அரசு அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இந்த வழக்கு விசாரணையை மே 23-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

முன்னதாக, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் குறிப்பிட்ட தூரம் வரை உள்ள மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்று கடந்த 2016-ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த 3,321 கடைகள் மூடப்பட்டன.

இந்நிலையில் சண்டிகர் வழியாகச் செல்லும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக வகை மாற்றம் செய்து மீண்டும் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், நகராட்சிப் பகுதியில் மதுக்கடைகள் திறப்பது குறித்து உச்ச நீதிமன்றம் சில விளக்கங்களை அளித்தது.

அதனை அடிப்படையாகக் கொண்டு தமிழகத்தில் கடந்த 2017 செப்டம்பர் 1-ம் தேதி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையர், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உடனடியாக மதுக்கடைகள் திறக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பினார். அதன்படி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன.

இதை எதிர்த்து வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை தலைவர் கே.பாலு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘தமிழக அரசின் சுற்றறிக்கை உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. எனவே, அந்த சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும். புதிதாக திறந்த கடைகளை மூட உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘‘ தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக வகைமாற்றம் செய்து அதுதொடர்பாக முறையான அறிவிப்பு செய்யப்படாமல் மதுபானக்கடைகள் திறக்கப்பட்டு இருந்தால் அந்தக் கடைகளை உடனடியாக மூட வேண்டும்.

அதுபோல வகை மாற்றம் செய்யாமல் இனி புதிதாக டாஸ்மாக் கடைகளைத் திறக்க தடை விதிக்கப்படுகிறது’’ என்று கடந்த ஏப் 28 அன்று உத்தரவிட்டது. இந்த உத்தரவைத் தொடர்ந்து தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடும் பணி நேற்று நடைபெற்றது.

இதன்படி சென்னை மண்டலத்தில் மட்டும் சுமார் 150 கடைகள் மூடப்பட்டன. தமிழகம் முழுவதும் 1,300-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன.

இந்நிலையில் 1300 டாஸ்மாக் கடைகளை மூடும் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x