‘2026-ல் தே.ஜ.கூட்டணியைச் சேர்ந்தவர் தான் தமிழக முதல்வராக இருப்பார்’ - நாராயணன் திருப்பதி

‘2026-ல் தே.ஜ.கூட்டணியைச் சேர்ந்தவர் தான் தமிழக முதல்வராக இருப்பார்’ - நாராயணன் திருப்பதி
Updated on
1 min read

தேவகோட்டை: “2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்தவர் தான் தமிழக முதல்வராக இருப்பார்” என பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் நேற்றிரவு பாஜக சார்பில் நாடாளுமன்ற தேர்தல் நன்றி அறிவிப்பு மற்றும் மத்திய பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. நகர அமைப்பாளர் இறகுசேரி காசிராஜா தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, மாவட்டத் தலைவர் மேப்பல் சக்தி, பொதுச் செயலாளர் நாகராஜன் உள்ளிட்டோர் பேசினர்.

முன்னதாக காரைக்குடியில் நாராயணன் திருப்பதி செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு திட்டத்தில் தமிழகம் அதிக பயனடைந்துள்ளது. ஆனால் பட்ஜெட்டில் தமிழகம் இடம் பெறவில்லை. திருக்குறள் வரவில்லை என்று வேண்டுமென்றே கட்டுக்கதை சொல்லி திசை திருப்ப நினைப்பது பலிக்காது.

தமிழக முதல்வர் தமிழக மக்களுக்காக பணியாற்ற வேண்டும். தங்களது குடும்பத்துக்காக பணியாற்ற கூடாது. தமிழகம் கொலைகார மாநிலமாக மாறியுள்ளது. தமிழக அரசு திறனற்று போய் உள்ளது. காரைக்குடியில் போலி மருத்துவரை போன்று போலி மேயர் உள்ளார். காரைக்குடி அதிகாரபூர்வமாக மாநகராட்சியாக மாறாதபோது, நகராட்சித் தலைவர் எப்படி மேயர் ஆனார்.

நகராட்சியில் பெரும் ஊழல் நடைபெறுகிறது. இதில் மாவட்ட ஆட்சியர் தலையிட வேண்டும். அதிகார மமதையோடு நடப்போர் யாராக இருந்தாலும் பாஜக வன்மையாக கண்டிக்கும். அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகள் கடத்தப்படுவதை தடுக்க வேண்டும். வருகிற 2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்தவர் தான் தமிழக முதல்வராக இருப்பார். தமிழகத்தில் கடந்த 2023-ல் பிளஸ் 2 தேர்வில் முறைகேடு நடந்தது. மறுத்தேர்வு நடத்தினார்களா?. பொதுத் தேர்வு பரீட்சையில் தோல்வியுற்றதால் தமிழகத்தில் பல ஆண்டுகளாக பல்லாயிரம் மாணவர்கள் உயிரிழந்துள்ளன்ர் இதற்காக பிளஸ் 2 தேர்வை தடை செய்யலாமா? இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in