Last Updated : 25 May, 2018 11:59 AM

 

Published : 25 May 2018 11:59 AM
Last Updated : 25 May 2018 11:59 AM

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்ற நீதிபதி விசாரணை நடத்த வேண்டும்: நாராயணசாமி

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்ற நீதிபதி விசாரணை நடத்த வேண்டும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தினார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட திமுக சட்டப்பேரவை உறுப்பினர் சிவா உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட தோழமைக் கட்சியினரை போலீஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை முதல்வர் நாராயணசாமி சந்தித்து ஆதரவு கொடுத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''தூத்துக்குடியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் கண்டிக்கத்தக்கது. போராட்டம் நடத்தியவர்களை கண்ணீர் புகை குண்டு, வானத்தை நோக்கி சுட்டு எச்சரித்துக் கலைத்திருக்க வேண்டும், ஆனால் மனிதர்கள் மீது சுட்டது மனித உரிமை மீறிய செயலாகும்.

இச்சம்பவத்தைக் கண்டித்து தமிழகம், புதுச்சேரியில் திமுக, காங்கிரஸ் கூட்டணியினர் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

முதல்வராக அல்ல காங்கிரஸ் கட்சியின் தொண்டன் என்ற முறையில் கைது செய்யப்பட்டவர்களை சந்தித்துப் பேசினேன். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு பதில் தற்போது பணியில் இருக்கும் நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்'' என நாராயணசாமி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x