புதுச்சேரி அரசை எதிர்த்த பாஜக அமைச்சருக்கு அதிகாரம் குறைப்பு; அமைச்சர் திருமுருகனுக்கு துறைகள் ஒதுக்கீடு

அமைச்சர் திருமுருகன் | கோப்புப்படம்
அமைச்சர் திருமுருகன் | கோப்புப்படம்
Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்சேரியில் அமைச்சராகப் பொறுப்பேற்று நான்கரை மாதங்களுக்குப் பிறகு திருமுருகனுக்கு இன்று (ஜூலை 31) துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதேசமயம் அரசுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த பாஜக அமைச்சருக்கு அதிகாரம் குறைக்கப்பட்டுள்ளது.

புதுவை அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த ஒரேயொரு பெண் அமைச்சர் சந்திரபிரியங்கா கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார். அவரிடம் போக்குவரத்து, ஆதிதிராவிடர் நலம், வீட்டுவசதி, தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு, கலைப்பண்பாடு, பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறைகள் இருந்தன. அமைச்சர் நீக்கத்தால் அத்துறைகளை முதல்வர் ரங்கசாமி கவனித்து வந்தார். இதைத்தொடர்ந்து 5 மாதங்கள் புதிய அமைச்சர் நியமிக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில், மக்களவைத் தேர்தல் நெருங்கிய சூழலில் கடந்த மார்ச் மாதம் காரைக்கால் வடக்கு தொகுதியைச் சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏ-வான திருமுருகன் அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவர் கடந்த மார்ச் 14-ல் அமைச்சராக பதவியேற்றார். ஆனால், அமைச்சர் பதவியேற்பு முடிந்தும் அவருக்கான துறைகள் ஒதுக்கப்படவில்லை. அதனால் அவர் துறைகள் இல்லாத அமைச்சராக பலமாதங்கள் நீடித்து வந்தார்.

மக்களவைத் தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தது. அப்போது பாஜக அதிருப்தி எம்எல்ஏ-க்கள் தங்களுக்கும் அமைச்சர் பதவி கேட்கத்தொடங்கினர். இச்சூழலில் பாஜக அமைச்சர் சாய் சரவணன் குமார் தனது தொகுதியில் ரெஸ்டோபாரை மூட கலால்துறையை வைத்துள்ள முதல்வரை அணுகாமல் ஆளுநரிடம் மனு கொடுத்தார். அத்துடன் தொகுதியில் பட்டா விவகாரம் தொடர்பாக அரசுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இச்சூழலில், சாய் சரவணன் குமாரின் துறைகளை மாற்றியதுடன், அமைச்சராகி நாலரை மாதங்களாக இலாகா இல்லாத அமைச்சராக வலம் வந்த திருமுருகனுக்கு துறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. பாஜக அமைச்சர் சாய் சரவணன் குமாருக்கு ஆதிதிராவிடர் நலத்துறை, தீயணைப்புத்துறை, சிறுபான்மை விவகாரங்கள் துறை ஆகியவை தரப்பட்டுள்ளன. ஏற்கெனவே இவர் ஆறு துறைகளை கவனித்து வந்தார். தற்போதைய உத்தரவுப்படி அவரது துறைகள் குறைக்கப்பட்டுள்ளன.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, சமூக மேம்பாடு, நகர்ப்புற அடிப்படை சேவைகள் உள்ளிட்ட துறைகள் தற்போது முதல்வர் வசம் சென்றுள்ளன. என்.ஆர்.காங்கிரஸை சேர்ந்த அமைச்சர் திருமுருகனுக்கு குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் துறை, வீட்டுவசதி, கலை மற்றும் பண்பாட்டுத்துறை, பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆளுநர் உத்தரவுப்படி இதற்கான ஆணையை தலைமைச்செயலர் சரத் சவுகான் இன்று வெளியிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in