

சென்னை: மத்திய வெளியுறவுத் துறை செயலரை சந்தித்த மதிமுக முதன்மைச் செயலர் துரை வைகோ எம்.பி. மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தினார்.
டெல்லியில் மத்திய வெளியுறவு துறை செயலர் விக்ரம் மிஸ்ரியை, மதிமுக முதன்மைச் செயலர் துரை வைகோ நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். அப்போது அவர் இலங்கை அரசு கைது செய்த தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மத்திய அரசு உரிய சட்ட திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். கச்சத்தீவு ஒப்பந்ததை இலங்கை அரசு கடைபிடிப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைமனுவை வழங்கினார்.
இதுதொடர்பாக சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக செயலரிடம் அவர் விரிவாக கலந்துரையாடினார். அப்போது செயலர் கூறும்போது, இந்தியா- இலங்கை இடையிலான பல்வேறு ஒப்பந்தங்கள் மற்றும் சீன நாட்டின் தலையீடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் இருப்பதால் இப்பிரச்சினையை கவனமுடன் கையாள வேண்டும் என தெரிவித்தார்.
சந்திப்பின்போது, தேசிய பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சின்னத்தம்பி மற்றும் வழக்கறிஞர் பிரவீன் ஆகியோர் உடனிருந்தனர் என மதிமுக தலைமையகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.