Published : 25 May 2018 09:19 AM
Last Updated : 25 May 2018 09:19 AM

குட்கா வழக்கில் விரைவில் எப்ஐஆர் பதிவு செய்ய சிபிஐயிடம் கோரிக்கை: ஜெ.அன்பழகன் மீண்டும் மனு அளித்தார்

குட்கா விவகாரத்தில் விரைவில் எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என்று சிபிஐ அலுவலகத்தில் ஜெ.அன்பழகன் எம்எல்ஏ மனு கொடுத்துள்ளார்.

2016-ம் ஆண்டு குட்கா தயாரிப்பு நிறுவன பங்குதாரர்களில் ஒருவரான மாதவராவ் என்பவரின் வீட்டில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது டைரி ஒன்று சிக்கியது. அந்த டைரியில் அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே. ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உட்பட பலருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டிருந்தது.

இந்தக் குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் மனுத் தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு கடந்த மாதம் 26-ம் தேதி தீர்ப்பு வழங்கியது.

அதைத் தொடர்ந்து, குட்கா வழக்கில் தொடர்புடையவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை சாஸ்திரி பவனில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கடந்த 2-ம் தேதி மனு கொடுத்தார். இந்நிலையில், டெல்லியில் உள்ள சிபிஐ இயக்குநருக்கும், சென்னையில் உள்ள சிபிஐ இணை இயக்குநருக்கும் ஜெ.அன்பழகன் எம்எல்ஏ ஒரு மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

குட்கா வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உட்பட உயர் அதிகாரிகள் பலர் சிக்கியுள்ளனர். எனவே, ஆதாரங்களை அழிக்க முயற்சி நடக்கலாம். அதற்குள் சிபிஐ தீவிர விசாரணை நடத்தி, குற்றம் செய்தவர்கள் மீது விரைவில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x