Last Updated : 30 May, 2018 12:52 PM

 

Published : 30 May 2018 12:52 PM
Last Updated : 30 May 2018 12:52 PM

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரம்: தமிழக அரசு ஜூன் 1-ம் தேதி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தது தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கவும், தமிழக தலைமைச் செயலாளர் உள்ளிட்ட 7 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யவும் கோரிய வழக்கில் தமிழக அரசு வரும் ஜூன் 1-ம் தேதி பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

அனைத்திந்திய வழக்கறிஞர் யூனியன் பொதுச் செயலாளர் முத்து அமுதநாதன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனுவினை தாக்கல் செய்திருந்தார்.

அதில், “தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளிவரும் நச்சுப் புகையினால் அப்பகுதி மக்கள் பலர் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் போராட்டம் நடைபெற்றது. இதில் கடந்த 22 ஆம் தேதி பல்வேறு இடங்களில் நடைபெற்ற ஊர்வலத்தில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பள்ளி மாணவி உட்பட 13 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதில் 50-க்கும் அதிகமானோர் தூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

துப்பாக்கிச் சூடு சம்பவத்தினால் தூத்துக்குடி பகுதியில் இணையதள சேவை, போக்குவரத்துச் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. தூத்துக்குடி நகரமே தீவு போல் காணப்படுகிறது. அப்பகுதி மக்கள் இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு முறையான அனுமதி பெறாமல் நடந்துள்ளது. எனவே தமிழக தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், காவல்துறை டிஜிபி, டிஐஜி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்பி, சிப்காட் இன்ஸ்பெக்டர் ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டம் 302-ன் படி கொலை வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

அதேபோல், தூத்துக்குடி கந்தகுமார் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில் “தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்க வேண்டும். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 50 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா 10 லட்சம் வழங்க உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.

இந்த இரண்டு மனுக்களும் இன்று (புதன்கிழமை) நீதிபதிகள் முரளிதரன், கிருஷ்ணவள்ளி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இதுகுறித்து தமிழக அரசு வரும் ஜூன் 1-ம் தேதி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கினை அன்றைய தேதிக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x