Published : 13 May 2018 09:37 AM
Last Updated : 13 May 2018 09:37 AM

சசிகலா அனுப்பியதாக வந்த நோட்டீஸ் தினகரனின் அரசியல் சூழ்ச்சி: அம்மா அணி செய்தி தொடர்பாளர் குற்றச்சாட்டு

திவாகரனுக்கு சசிகலா அனுப்பியுள்ளதாக வந்துள்ள வக்கீல் நோட்டீஸ் தினகரனின் அரசியல் சூழ்ச்சி என அம்மா அணி செய்தி தொடர்பாளர் கை.இளந்தமிழன் தெரிவித்தார்.

இதுகுறித்து நேற்று, ‘தி இந்து’விடம் அவர் கூறியதாவது: அம்மா அணியின் ஒருங்கிணைப்பாளர் வி.திவாகரனுக்கு வழக்கறிஞர் செந்தூர் பாண்டியன் மூலம் சசிகலா நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக ஊடகங்களில் வெளியாகும் தகவல்கள் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. தன் படத்தை திவாகரன் பயன்படுத்தக்கூடாது என சசிகலா கூறுவதற்கு வாய்ப்பே இல்லை.

சசிகலாவின் ஒப்புதலுடன், சசிகலாவின் வழக்கறிஞர் செந்தூர் பாண்டியன் திவாகரனுக்கு அனுப்பியுள்ளதாக ஊடகங்களில் காட்டப்படும் நோட்டீஸ் நம்பும்படியாக இல்லை. மேலும், சசிகலா தற்போது சிறையில் உள்ள நிலையில் இப்படி ஒரு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்றால் நீதிமன்றத்தை அணுகி, அதன் பின்னரே அனுப்ப இயலும்.

இந்த நோட்டீஸை அவர் தன்னிச்சையாக அனுப்பியிருந்தால் சிறையில் இருந்துகொண்டே அரசியல் செய்வதுபோலாகிவிடும். இது சட்ட விதிமுறைகளுக்கு முரணானது என வழக்கறிஞர்கள் பலரும் கூறுகின்றனர். எனவே, இந்த நோட்டீஸ் விவகாரம் தினகரனின் அரசியல் சூழ்ச்சிகளில் ஒன்றுதான் என்று நம்புகிறோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x