மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை நெருங்குகிறது: நீர்வரத்து 34,690 கனஅடியாக சரிவு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 87.72 அடியை எட்டி, கடல்போல காட்சியளிக்கிறது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 87.72 அடியை எட்டி, கடல்போல காட்சியளிக்கிறது.
Updated on
1 min read

மேட்டூர்/தருமபுரி: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை நெருங்கி வரும் நிலையில் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 34,690 கனஅடியாக சரிந்துள்ளது.

கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், அங்குள்ள கபினி, கேஆர்எஸ் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து, உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்து வந்த நிலையில், மீண்டும் குறையத் தொடங்கியுள்ளது. அணைக்கு நேற்று காலை விநாடிக்கு 60,771 கனஅடியாக இருந்த நீர்வரத்து, மாலை 34,690 கனஅடியாக குறைந்தது. அணை நீர்மட்டம் நேற்று காலை 83.98 அடியாக இருந்த நிலையில், மாலை 87.72 அடியாகவும், நீர் இருப்பு 46.03 டிஎம்சியில் இருந்து 50.08 டிஎம்சியாகவும் உயர்ந்தது.

ஒகேனக்கல்லில் 27,000 கன அடி: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று முன் தினம் காலை விநாடிக்கு 70 ஆயிரம் கனஅடியாக பதிவான நீர்வரத்து, மாலை 53 ஆயிரம் கனஅடியாகக் குறைந்தது. இந்நிலையில், நேற்று காலை 6 மணி அளவீட்டின்போது விநாடிக்கு 42 ஆயிரம் கன அடியாக குறைந்த நீர்வரத்து, மாலை 4 மணி அளவீட்டின்போது 27 ஆயிரம்கனஅடியாக மேலும் குறைந்தது.

அருவிகள் தெரிந்தன: நீர்வரத்து குறைவு காரணமாக ஒகேனக்கல் காவிரியாற்றில் நீரின் ஆர்ப்பரிப்பு சற்றே தணிந்துள்ளது. மேலும், வெள்ளப்பெருக்கால் மூழ்கிய பிரதான அருவி, சினி ஃபால்ஸ், ஐந்தருவி ஆகியவை தற்போது வெளியில் தெரியத் தொடங்கியுள்ளன.

இருப்பினும், கர்நாடக மாநில அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு அவ்வப்போது மாறுதலுக்கு உட்பட்டு வருகிறது. அதற்கேற்ப ஒகேனக்கல்லிலும் நீர்வரத்தின் அளவு ஏற்ற, இறக்கங்களுடன் பதிவாகி வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in