விபத்தில் மகன் இறந்த துக்கத்தில் பெற்றோர் தற்கொலை: அவிநாசியில் சோகம்

விபத்தில் மகன் இறந்த துக்கத்தில் பெற்றோர் தற்கொலை: அவிநாசியில் சோகம்

Published on

அவிநாசி அருகே சாலை விபத்தில் மகன் இறந்த துக்கத்தில் பெற்றோர் தற்கொலை செய்துகொண்டனர்.

நாமக்கல் குமாரமங்கலம் ஈகாட்டூரைச் சேர்ந்தவர் சக்திவேல் (55). இவர் விவசாயி. இவரது மகன் நிஷாந்த் (18).

நிஷாந்த நேற்று (மே 21) கோவைக்கு பாஸ்போர்ட் விண்ணப்பிப்பதற்காக சென்றுள்ளார். நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற அவர் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பியபோது ஆட்டயாம்பாளையம் மேம்பாலத்தில் விபத்தில் சிக்கினார்.

மேம்பாலத்தில் நின்றிருந்த சரக்கு வாகனத்தின்மீது வேகமாக வந்த நிஷாந்தின் வாகனம் பலமாக மோதியுள்ளது. இதில் நிஷாந்தும் அவரது நண்பரும் தூக்கி வீசப்பட்டனர். இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். அவிநாசி போலீஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். நிஷாந்தின் பெற்றோருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

தங்கள் ஒரே மகன் விபத்தில் உயிரிழந்த அதிர்ச்சித் தகவலை அறிந்த சக்திவேல் அவரது மனைவி சுதா அதிர்ச்சியில் உறைந்தனர். இருவரும் அவிநாசி புறப்பட்டு வந்தனர். மகனின் சடலத்தைப் பார்த்துவிட்டு சக்திவேல் பூச்சி மருந்தை இருவரும் அருந்தியுள்ளனர். காவல் நிலைய வாயிலிலேயே மயங்கி விழுந்த இருவரையும் போலீஸார் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், இருவருமே சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

மகன் இறந்த துக்கத்தில் பெற்றோரும் தற்கொலை செய்துகொண்ட சக்திவேல் உறவினர்களை சோகத்தில் அழ்த்தியுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in