தமிழக மீனவர்கள் 22 பேருக்கு ஜூலை 30 வரை காவல் நீட்டிப்பு: இலங்கை நீதிமன்றம்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 22 மீனவர்கள். (அடுத்தப்படம்) ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகம்.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 22 மீனவர்கள். (அடுத்தப்படம்) ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகம்.
Updated on
1 min read

ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 22 பேருக்கு ஜூலை 30-ம் தேதி வரையிலும் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது. இதனையடுத்து மீனவர்கள் மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஜூன் 23-ம் தேதி அன்று கடலுக்குச் சென்ற ஜஸ்டின், ரெய்மெண்ட், ஹெரின் ஆகியோருக்குச் சொந்தமான மூன்று விசைப்படகுகளை நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் கைப்பற்றி படகுகளிலிருந்த 22 மீனவர்களை கைது செய்தனர்.

22 மீனவர்கள் மீதும் எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மூவருக்கு காசநோய் பாதிப்பு: இந்நிலையில், ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் இன்று இந்த வழக்கு நீதிபதி நளினி சுபாஷ்கரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் உள்ள மீனவர்களில் மூவருக்கு காச நோய் தொற்று கண்டறியப்பட்டதால் 19 பேர் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதையடுத்து, காசநோய் பாதிக்கப்பட்ட மூன்று மீனவர்களின் உடல்நலம் பரிசோதனை அறிக்கையுடன் 22 மீனவர்களையும் ஜூலை 30ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து மீனவர்கள் அனைவரும் மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in