Published : 03 May 2018 01:35 PM
Last Updated : 03 May 2018 01:35 PM

எஸ்.வி.சேகரை இதுவரை கைது செய்யாதது ஏன்?- காவல்துறை விசாரணை சரியில்லை: உயர் நீதிமன்றம் அதிருப்தி

பெண் பத்திரிகையாளர் மற்றும் ஊடகத்துறையில் பணியாற்றும் பெண்கள் குறித்து அவதூறான கருத்து தெரிவித்த எஸ்.வி.சேகர் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம் இதுவரை எஸ்.வி.சேகரை ஏன் கைது செய்யவில்லை? என்று கேள்வி எழுப்பியது. காவல்துறை விசாரணை சரியாக இல்லை எனவும் அதிருப்தி தெரிவித்தது.

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து மிகவும் தரக்குறைவான கருத்தை நடிகர் எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதைத் தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பத்திரிகையாளர்கள் நல சங்கம் சார்பில் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த மனு நீதிபதி ஜெகதீஸ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் எஸ்.வி.சேகருக்கு முன் ஜாமின் வழங்க ஆட்சேபம் தெரிவித்து, பத்திரிகையாளர்கள் பலர் இடையீட்டு மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

எஸ்.வி.சேகருக்கு முன் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து மனுக்கள் குவிந்தன. மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் போன்ற  அமைப்புகளும் எதிர்ப்புத் தெரிவித்து மனு செய்தன.

இந்நிலையில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்த வழக்கை வரும் மே 3-ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாகவும், கோடைக்கால அமர்வு, இந்த முன் ஜாமீன் கோரிய மனுவை விசாரிக்கும் என்று நீதிபதி தெரிவித்தார்.

அதுவரை எஸ்.வி. சேகரை கைது செய்யாமல் இருக்க காவல்துறைக்கு உத்தரவிட மறுத்துவிட்டார். இதனால் எஸ்.வி.சேகருக்கு புதிய சிக்கல் ஏற்பட்டது. ஆனால் அதன் பின்னர் எஸ்.வி.சேகர் எங்கிருக்கிறார் என்று தெரியாத நிலையில் அவரை கைது செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டும் போலீஸார் கைது செய்யவில்லை.

இந்நிலையில் ஜாமீன் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது எஸ்.வி சேகரை ஏன் கைது செய்யவில்லை? என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி அதிருப்தியை தெரிவித்தது.

இன்று வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி ராமதிலகம் முன் விசாரணைக்கு வந்தபோது அவருக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது என 10-க்கும் மேற்பட்ட இடை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ’’எஸ்.வி சேகரின் குற்றம் சாதாரண குற்றமல்ல, பெண்களுக்கு எதிராக சமுதாயத்தில் தவறான எண்ணத்தையும், தவறான நோக்கத்தையும் அவரது பதிவு பிரதிபளிக்கிறது.

மேலும் உச்சநீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளில் பெண்களுக்கு எதிரான நடைபெறும் குற்றங்களை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அவரது நடவடிக்கை பெண் சமுதாயத்திற்கு எதிரான நடவடிக்கை ஆகவே அவருக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது’’ என்று தெரிவித்தனர்.

எஸ்.வி.சேகர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், எஸ்.வி.சேகர் மீது போடப்பட்ட பிரிவுகள் ஜாமீன் வழங்கக்கூடிய பிரிவுகள், மேலும் எஸ்.வி.சேகர் பதிவு செய்யவில்லை, வேறொரு பதிவை ஷேர் செய்தார், ஆகவே இடை மனுதாரர் ஆட்சேபனையை ஏற்கக்கூடாது, முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

அரசு தரப்பு வழக்கறிஞர், ‘‘இந்த வழக்கில் விசாரணை முடிவடையவில்லை, இன்னும் நடந்து வருகிறது. இந்த பதிவு குறித்து பேஸ்புக் நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அது குறித்த உண்மைத்ததன்மை முடிவு வருவதற்காக காத்திருக்கிறோம்’’ என்று தெரிவித்தார்.

அப்போது கருத்து தெரிவித்த நீதிபதி ‘‘இந்த விசாரணை சரியான முறையில் நடைபெறுவதாக நாங்கள் கருதவில்லை. ஏனென்றால் இத்தனை இடை மனுதாரர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படவில்லை.

சாதாரண மனிதர் மீது புகார் அளிக்கப்பட்டால் எடுக்கப்படும் நடவடிக்கை இந்த வழக்கில் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. இந்த வழக்கில் அதுபோன்று நடவடிக்கை எடுத்துள்ளீர்களா? இந்த வழக்கில் காவல்துறையின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை’’ என்று கூறி வழக்கை ஒத்திவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x