அவதூறுகளை தடுக்க உரிய நடைமுறை கோரி வழக்கு: மத்திய அரசு, யூ-டியூப் நிறுவனத்தை எதிர்மனுதாரராக சேர்க்க ஐகோர்ட் உத்தரவு

அவதூறுகளை தடுக்க உரிய நடைமுறை கோரி வழக்கு: மத்திய அரசு, யூ-டியூப் நிறுவனத்தை எதிர்மனுதாரராக சேர்க்க ஐகோர்ட் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: அவதூறு பரப்பும் யூடியூப் சேனல்களை கட்டுப்படுத்தவும், முறைப்படுத்தவும் உரிய நடைமுறைகளை வகுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு, யூ-டியூப் நிறுவனத்தை எதிர்மனுதாரர்களாக சேர்க்க உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றம், விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்துள்ளது.

இதுதொடர்பாக சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் வி.பார்த்திபன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இருந்து யூ-டியூப் என்ற சமூக வலைதளம் உலகம்முழுவதும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மதம், இனம், மொழி, தனிநபர் வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஜனநாயக நாடான இந்தியாவில் சமீபகாலமாக அவதூறு அதிகளவில் பரப்பப்படுவதற்கு முக்கிய காரணியாக யூ-டியூப் சேனல்கள் உள்ளன.

பொறுப்பு துறப்பு என்ற பெயரிலும், நகைச்சுவை என்ற பெயரிலும் இந்த சேனல்கள் அவ்வப்போது வரம்பு மீறி செயல்படுகின்றன. இந்த யூ-டியூப் சேனல்களுக்கு எந்தவொரு கட்டுப்பாடும், முறைப்படுத்தலும் இல்லை. அவதூறு வீடியோக்கள் குறித்து புகார் எழுந்தபின்னரே அந்த சர்ச்சைக்குரிய வீடியோக்களை சமூக வலைதளங்களில் இருந்து சம்பந்தப்பட்ட நிறுவனம் நீக்குகிறது. இதனால் பாதிக்கப்படும் நபர்களுக்கு எந்தவொரு நிவாரணமும் கிடைப்பதில்லை. பல தம்பதிகள் இதுபோன்ற அந்நிய பதிவுகளால் விவாகரத்து பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சிலர் குழந்தைகளை போகப்பொருளாக வைத்தும் மோசமான வீடியோக்களை யூ-டியூப்களில் பதிவிடுகின்றனர். இதைவிடக்கொடுமை ஊடக விசாரணை என்ற பெயரில் சில யூ-டியூப் சேனல்கள் குற்ற வழக்குகளிலும் தன்னிச்சையாக புலன் விசாரணை நடத்தி வழக்கு மற்றும் விசாரணையை திசை திருப்பி விடுகின்றனர். எனவே யூ-டியூப் சேனல்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கவும், அவற்றை முறைப்படுத்தவும் உரிய நடைமுறைகளை வகுக்க தமிழக டிஜிபிக்கும், தமிழக அரசுக்கும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி கே.குமரேஷ்பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான மாநில அரசு ப்ளீடர் எட்வின் பிரபாகர், இந்த வழக்கில் யூ-டியூப் நிறுவனத்தையும், மத்திய அரசையும் எதிர் மனுதாரர்களாக சேர்க்காமல் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றார்.

அதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கில் மத்திய அரசையும், யூ-டியூப் நிறுவனத்தையும் எதிர்மனுதாரர்களாக சேர்க்க உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in