பேனர், கொடிமரங்களை நடும் வழக்கில் திமுகவுக்கு நீதிபதிகள் உத்தரவு

பேனர், கொடிமரங்களை நடும் வழக்கில் திமுகவுக்கு நீதிபதிகள் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடியை வரவேற்க கொடி கம்பம் நட்டபோது மின்சாரம் தாக்கி சிறுவன் இறந்த சம்பவம் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதி டி. கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி கே. குமரேஷ்பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த உயிர் பலி சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது அரசு தரப்பில், இந்த சம்பவத்தை ஒரு பாடமாகஎடுத்துக்கொண்டு எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து நீதிபதிகள், எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையான அனுமதி பெற்ற பிறகே பேனர்கள், கட்-அவுட்டுகள், கொடிமரங்களை நடுவோம் என அனைத்து அரசியல் கட்சிகளும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என கருத்து தெரிவித்தனர்.

பின்னர் முதலாவதாக திமுக தரப்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூலை 29-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in