Published : 26 May 2018 08:34 AM
Last Updated : 26 May 2018 08:34 AM

துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு பொறுப்பேற்று அரசு பதவி விலக வேண்டும்: நல்லகண்ணு வலியுறுத்தல்

`அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு பொறுப்பேற்று தமிழக அரசு பதவி விலக வேண்டும்’ என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு வலியுறுத்தினார்.

தூத்துக்குடியில் நடந்த கலவரத்தில் காயமடைந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய செயலாளர் கே.நாராயணா, தேசிய குழு உறுப்பினர் நல்லகண்ணு ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் நல்லகண்ணு கூறியதாவது: 100 நாட்கள் மக்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்களை அமைச்சர்கள், அதிகாரிகள் சந்தித்து பேசி தீர்வு காண முயற்சி எடுத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் பேரணி சென்ற மக்கள் மீது திட்டமிட்டு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ள னர்.

போராட்டம் நடத்தியவர்கள் சமூகவிரோதிகள் அல்ல. கொலைகார ஆலையை செயல்பட அனுமதித்தவர்கள்தான் சமூகவிரோதிகள். ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது என அரசு கூறுகிறது. ஆனால், பராமரிப்பு பணிகளுக்காகத்தான் ஆலை மூடப்பட்டுள்ளது என வேதாந்தா நிறுவனம் தெரிவிக்கிறது. ஆலையை மூட முடிவு என அரசு இப்போது கூறுகிறது. இதில் எதை நம்புவது? ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட வேண்டும் என்பதுதான் மக்களின் கோரிக்கை. அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு பொறுப்பேற்று தமிழக அரசு பதவி விலக வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x