Published : 17 May 2018 08:50 AM
Last Updated : 17 May 2018 08:50 AM

பள்ளிகள் திறப்பதற்குள் அனைத்து வாகனங்களிலும் ஆய்வு; பாதுகாப்பு குறைபாடு இருந்தால் வாகனங்கள் இயக்க அனுமதி மறுப்பு: போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திட்டவட்டம்

பள்ளிகள் திறப்பதற்குள் அனைத்து பள்ளி வாகனங்களில் ஆய்வு நடத்தப்படும். பாதுகாப்பு குறைபாடு இருந்தால் வாகனங் கள் இயக்க அனுமதிக்கப்படாது என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 30,490 பள்ளி வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இந்த வாகனங்கள் விபத்தில் சிக்காமல் இருக்க முன்கூட்டியே பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆண்டுதோறும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் கே.கே.நகர் மற்றும் வளசரவாக்கம் வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு உட்பட்ட பள்ளிகளின் வாகனங்களை ஆய்வு மேற்கொள்ள நந்தனம் கலைக் கல்லூரி வளாகத்துக்கு கொண்டுவரப்பட்டன.

அதன்பிறகு, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டு பணியைத் தொடங்கி வைத்தார். 129 பள்ளி வாகனங்களில் ஆய்வு செய்யப்பட்டன. பாதுகாப்பு குறைபாடு இருந்த 10 வாகனங் களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்படவில்லை.

ஆய்வுப் பணியின்போது, போக்குவரத்துத் துறை ஆணையர் சமயமூர்த்தி, மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன், போக்குவரத்துத் துறை இணை ஆணையர் மணக்குமார், எழும்பூர் வருவாய் கோட்டாட்சியர் நாராயணன், வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் பாஸ்கரன், ஸ்ரீதர், மாதவன், மெட்ரிக்குலேசன் பள்ளிகளின் ஆய்வாளர் சண்முகவேல் மற்றும் வாகன ஆய்வாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

16 அம்ச பாதுகாப்பு

அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் மாவட்டங்கள்தோறும் மாவட்ட ஆட்சியர்கள், போக்குவரத்து அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரி, கல்வித்துறை அதிகாரிகளுடன் இணைந்து பள்ளி வாகனங்களில் 16 அம்ச பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் மொத்தமுள்ள 30,490 வாகனங்களில் இதுவரை யில் 6,932 பள்ளி வாகனங்களில் ஆய்வு நடத்தியதில் 814 வாகனங்களில் சில பாதுகாப்பு குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டு, அனுமதிசீட்டு வழங்க மறுக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு தற்போது 102 வாகனங்கள் மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அனுமதிசீட்டு வழங்கப்படும்.

ஓட்டுநர்களுக்கு பயிற்சி

அதேபோல், சென்னையில் கடந்த 15-ம் தேதி முதல் 18-ம் தேதி வரையில் ஆய்வு நடத்தப் படவுள்ளது. சென்னையில் உள்ள 629 வாகனங்களில் 429 வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. தமிழகம் முழுவதும் எஞ்சியுள்ள பள்ளி வாகனங்களில் பள்ளிகள் திறப்பதற்கு முன்பு ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு குறைபாடு இருக் கும் வாகனங்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்படாது. பாதுகாப்பு குறைபாடு சரிசெய்து மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்திய பிறகே அனுமதி சீட்டு வழங்கப்படும். பள்ளி வாகனங்களில் இருக்கும் அவசர காலத்தில் பயன்படுத்தும் கருவிகள் குறித்து ஓட்டுநர் களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x