

சென்னை: தவறுதலாக ரூ.5 லட்சம் மதிப்புள்ள வைர நெக்லஸை குப்பையில் கொட்டிய நிலையில், தொலைந்து போன நகையை தூய்மைப் பணியாளர் மீட்டுக்கொடுத்துள்ளார்.
சென்னை விருகம்பாக்கம், ராஜமன்னார் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசிப்பவர் தேவராஜ். இவர் நேற்று தவறுதலாக ரூ.5 லட்சம் மதிப்புள்ள வைர நெக்லஸை குப்பைகளுடன் சேர்த்து, மாநகராட்சி சார்பில் குப்பை சேகரிக்கும் தனியார்நிறுவன குப்பை வாகனத்தில் கொட்டியுள்ளார்.
பின்னர், வீட்டில் நகையை தேடியபோது, குப்பையுடன் சேர்த்து கொட்டப்பட்டிருக்கலாம் என்பதை உணர்ந்த தேவராஜ், உடனடியாக தனியார்நிறுவனத்தை தொடர்புகொண்டு உதவி கோரினார்.
அப்பகுதியில் குப்பை சேகரித்து வரும் அந்நிறுவனத்தின் குப்பை சேகரிப்பு வாகன ஓட்டுனரான அந்தோணி சாமி, அருகில் உள்ள குப்பைத் தொட்டிகளில் தீவிர சோதனை நடத்தி, குப்பைகளின் நடுவே இருந்த வைர நெக்லஸை மீட்டு, உரிமையாளரிடம் ஒப்படைத்தார். இத்தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், தூய்மைப் பணியாளர் அந்தோணி சாமிக்கு பாராட்டுகள் குவிகிறது.