Published : 04 May 2018 09:21 AM
Last Updated : 04 May 2018 09:21 AM
பூந்தமல்லி அருகே ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருந்த ரூ.35.25 கோடி மதிப்புள்ள அரசு நிலங்களை வருவாய் துறை அதிகாரிகள் மீட்டனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 12 வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நேற்று முன்தினம் ஜமாபந்தி தொடங்கி நடந்து வருகிறது. அந்த வகையில், பூந்தமல்லி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்துவரும் ஜமாபந்தியில் திருவள்ளூர் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ வருவாய் தீர்வாய அலுவலராக செயல்பட்டு, வீட்டுமனை பட்டா உள்ளிட்டவை தொடர்பான மனுக்களை மக்களிடமிருந்து பெற்று வருகிறார்.
பெறப்பட்ட மனுக்களில் ஒன்றில், “காட்டுப்பாக்கம் சி.டி.ஏ. நகரில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு நிலத்தை மீட்க வேண்டும்” என கோரப்பட்டிருந்தது.
இதையடுத்து, நேற்று முன்தினம் சம்பந்தப்பட்ட பகுதிக்கு, திருவள்ளூர் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ தலைமையில், பூந்தமல்லி வட்டாட்சியர் ரமா உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அந்த ஆய்வில், ரூ.35 கோடி மதிப்பிலான 2.74 ஏக்கர் பரப்புள்ள அரசுக்கு சொந்தமான நிலத்தை, சிலர் ஆக்கிரமித்து வீட்டு மனைகளாக உருவாக்கி, விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து, சம்பந்தப்பட்ட நிலத்தை வருவாய்த் துறை அதிகாரிகள் அதிரடியாக மீட்டனர்.
அதேபோல், ஜமாபந்தியில் வந்த கோரிக்கைகள் தொடர்பாக ஆவணங்களை சரிபார்க்கும் பணியின் போது, வீரராகவபுரத்தில் அரசு நிலத்தை தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்தது தெரியவந்தது.
இதனையடுத்து, நேற்று மாலை வீரராகவபுரம் சென்று ஆய்வு நடத்திய வருவாய்த் துறை அதிகாரிகள், அங்கு ஆக்கிரமிப்பாளரின் பிடியில் சிக்கியிருந்த ரூ.25 லட்சம் மதிப்பிலான 4 சென்ட் அரசு நிலத்தை மீட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT