ரூ.1.50 கோடி இழப்பீடு வங்கி பெண் ஊழியர் வழக்கு: இஎஸ்ஐ மருத்துவமனை நிர்வாகம் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

ரூ.1.50 கோடி இழப்பீடு வங்கி பெண் ஊழியர் வழக்கு: இஎஸ்ஐ மருத்துவமனை நிர்வாகம் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: தவறான சிகிச்சை காரணமாக படுத்த படுக்கையான தனியார் வங்கி பெண் ஊழியர் ரூ.1.50 கோடி இழப்பீடு கேட்டு தொடர்ந்த வழக்கில், கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவமனை நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உள்ள தனியார் வங்கியின் துணை நிறுவனத்தில் பணியாற்றிய கஸ்தூரி பிரியா என்பவர், உடல் நலக்குறைவு காரணமாக சென்னை கே.கே.நகரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், உடல்நிலை மேலும் மோசமடைந்து, படுத்த படுக்கையாகி இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனால், தனக்கு இஎஸ்ஐ மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து நிபுணர் குழுவை நியமித்து விசாரிக்க கோரியும், தனக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு ரூ.1.50 கோடி இழப்பீடு வழங்கக் கோரியும் கஸ்தூரி பிரியா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதி்ல், தனக்கு தவறான சிகிச்சை அளித்ததோடு, தனக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்த ஆவணங்களையும் இஎஸ்ஐ மருத்துவமனை நிர்வாகம் வழங்க மறுக்கிறது. எனவே எனக்கு ஏற்பட்டுள்ள மன உளைச்சலுக்கும், பாதிப்புக்கும் உரிய இழப்பீடு வழங்கவும், சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும், என கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், இதுதொடர்பாக இஎஸ்ஐ மருத்துவ கழகம், கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மருத்துவர்கள், இந்திய மருத்துவ கவுன்சில் ஆகியோர் வரும் ஆகட்ஸ் 19-க்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in