Last Updated : 29 May, 2018 07:29 AM

 

Published : 29 May 2018 07:29 AM
Last Updated : 29 May 2018 07:29 AM

ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல்: பொதுமக்கள் வரவேற்பு

ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு நேற்று அரசாணை வெளியிட்டதைத் தொடர்ந்து, தூத்துக்குடியில் உள்ள அந்த ஆலையை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும். இனிமேல் இந்த ஆலை இயங்க தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என, அமைச்சர்கள், அதிகாரிகள் கூறி வந்தனர். இருப்பினும் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது தொடர்பாக அரசாணை வெளியிட வேண்டும் என, பொதுமக்களும், பல்வேறு அமைப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தினர்.

தூத்துக்குடிக்கு நேற்று வந்த தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடமும் மக்கள் இதே கருத்தை முன்வைத்தனர். இதனைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது தொடர்பாக தமிழக அரசு நேற்று மாலை அரசாணை வெளியிட்டது.

இந்த அரசாணை வெளியிடப்பட்டதை தொடர்ந்து, அதிகாரிகள் உடனடியாக ஸ்டெர்லைட் ஆலையை பூட்டி சீல் வைத்தனர். மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ராம்பா, தூத்துக்குடி சார் ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் முன்னிலையில், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் நல பொறியாளர் பி.எஸ்.லிவிங்ஸ்டன், தூத்துக்குடி வட்டாட்சியர் சிவகாமி சுந்தரி ஆகியோர் ஆலையின் பிரதான நுழைவு வாயிலை பூட்டி சீல் வைத்தனர். அப்போது ஆலை தரப்பில் தலைமை பாதுகாப்பு அதிகாரி சுமித் பர்மன் உடனிருந்தார். ஸ்டெர்லைட் ஆலையை மூடும் தமிழக அரசின் அரசாணை நகல் கேட்டில் ஒட்டப்பட்டது.

ஆலை இயங்க முடியாது

ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஸ்டெர்லைட் ஆலை கடந்த 9.4.2018 முதல் இயங்கவில்லை. ஆலைக்கான மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பு கடந்த 24-ம் தேதி துண்டிக்கப்பட்டது. இருப்பினும் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். இது தொடர்பாக அரசாணை வெளியிட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துவந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன் அடிப்படையில் வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் முன்னிலையில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்துள்ளனர். இனிமேல் இந்த ஆலை இயங்க முடியாது. ஆலைக்குள் எந்த செயல்பாடும் இருக்கக்கூடாது.

ஆலையில் எந்த வகையான இயந்திரங்கள் உள்ளன. அவை எந்த நிலையில் உள்ளன. ஏதேனும் செயல்படுகிறதா என்பது குறித்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆலைக்குள் சென்று ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்றார் ஆட்சியர். ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தபோது ஏராளமான மக்கள் கூடி நின்று உற்சாகமாக குரல் எழுப்பி வரவேற்பு தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x