Published : 27 May 2018 09:11 AM
Last Updated : 27 May 2018 09:11 AM
திருச்சி நகைப்பட்டறை உரிமையாளர், சென்னையில் சாலை விபத்தில் பலியான சம்பவத்தில் மர்மம் நீடிக்கிறது. தன்னிடம் வழிப்பறி செய்த திருடர்களை விரட்டிச் சென்றபோது அவர் விபத்தில் சிக்கினாரா என்ற புதிய கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் ரங்கராஜன் (68). அதே பகுதியில் நகைப் பட்டறை வைத்திருந்தார். இவர் சென்னை சவுகார்பேட்டையில் உள்ள மொத்த நகை வியாபாரிகளிடம் தங்கக் கட்டிகளை வாங்கிச் சென்று நகைகளாக மாற்றி விற்பனை செய்து வந்துள்ளார். இதற்காக வாரம் 2 முறை சென்னைக்கு வந்து செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.
சவுகார்பேட்டை செல்வதற்கு வசதியாக ஸ்கூட்டர் ஒன்றை எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள வாகன நிறுத்தும் இடத்தில் நிரந்தரமாக நிறுத்தி வைத்திருந்துள்ளார்.
ரங்கராஜன் நேற்று முன்தினம் தங்கக் கட்டி வாங்குவதற்காக சென்னை வந்தார். சவுகார்பேட்டையில் 500 கிராம் தங்கக் கட்டியை வாங்கிக் கொண்டு திருச்சி செல்வதற்காக எழும்பூர் ரயில் நிலையம் நோக்கி நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு சென்று கொண்டிருந்தார்.
வேகத்தடையில் விழுந்தார்
சென்னை வேப்பேரி புதிய காவல் ஆணையர் அலுவலகம் 3-வது கேட் அருகே செல்லும்போது வேகத்தடையில் நிலை தடுமாறி ஸ்கூட்டருடன் ரங்கராஜன் கீழே விழுந்துள்ளார். பலத்த காயமடைந்த அவர் ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு ரங்கராஜனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சாவில் மர்மம் என புகார்
இந்நிலையில், ரங்கநாதன் உயிரிழந்த தகவல் திருச்சியில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் கள் நேற்று காலை சென்னை வந்தனர். ரங்கராஜன் சாவில் மர்மம் இருப்பதாக அவரது மகன் வெங்கடேசன் வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். தனது புகார் மனுவில், “என் தந்தை 500 கிராம் தங்கக் கட்டியை வாங்குவதற்காக சென்னை வந்தார். அந்த தங்கக்கட்டியை தற்போது காணவில்லை. வழிப்பறி திருட்டில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து காவல் ஆணையர் அலுவலக நுழைவுவாயில் அருகே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். இதில் ரங்கராஜன் ஸ்கூட்டரை வேகமாக ஓட்டி வந்து வேகத்தடையில் நிலைதடுமாறி விழும் காட்சிகள் பதிவாகி இருந்தன.
எனவே ரங்கராஜன் தங்கக் கட்டியை வாங்கி வந்தபோது, அதை மர்ம நபர்கள் வழிப்பறி செய்து தப்பி இருக்கலாம். அவர்களை ஸ்கூட்டரில் ரங்கராஜன் பின் தொடர்ந்து விரட்டி வந்தபோது விபத்தில் சிக்கி இறந்திருக்கலாம் என்ற கோணத்தில் வேப்பேரி போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT