“ரவுடி திருவேங்கடம் என்கவுன்ட்டரில் சந்தேகம் உள்ளது” - இபிஎஸ்

“ரவுடி திருவேங்கடம் என்கவுன்ட்டரில் சந்தேகம் உள்ளது” - இபிஎஸ்
Updated on
1 min read

வேலூர்: “ரவுடி திருவேங்கடம் என்கவுன்ட்டரில் சந்தேகம் உள்ளது” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

வேலூரில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது இதுகுறித்து பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்த திருவேங்கடம் மீது என்கவுன்ட்டர் நடந்திருப்பதில் சந்தேகம் உள்ளது. சரணடைந்தவரை அதிகாலை நேரத்தில் அவசரமாக அழைத்துச் செல்ல வேண்டிய அவசியம் ஏன்?. அவர் மறைத்துவைத்த ஆயுதத்தை கைப்பற்ற அழைத்துச் சென்றதாக கூறுகிறார்கள்.

கொலை குற்றவாளிகளை அழைத்துச் செல்லும்போது கைவிலங்கு அணிந்து தான் அழைத்து செல்ல வேண்டும் என்பது விதி. அப்படியிருக்கையில் பாதுகாப்புடன் திருவேங்கடம் அழைத்துச் செல்லப்பட்டாரா?.

ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைது செய்யப்பட்டுள்ள 11 பேரும் உண்மையான குற்றவாளிகள் தானா என அவரது உறவினர்களும், கட்சியினரும் சந்தேகம் எழுப்பிய நிலையில், இப்படியான என்கவுன்ட்டர் நடந்திருப்பது சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகிறது” என்று தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in