அரசு ஊழியர் காப்பீட்டு திட்டத்தில் பெற்றோரையும் சேர்ப்பது குறித்து 3 மாதத்தில் அரசு முடிவு எடுக்க வேண்டும்: ஐகோர்ட்

அரசு ஊழியர் காப்பீட்டு திட்டத்தில் பெற்றோரையும் சேர்ப்பது குறித்து 3 மாதத்தில் அரசு முடிவு எடுக்க வேண்டும்: ஐகோர்ட்
Updated on
1 min read

சென்னை: புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் திருமணமான அரசு ஊழியர்களின் பெற்றோரை சேர்ப்பது குறித்து தமிழக அரசு 3 மாதங்களில் முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் காவலராக பணியாற்றும் ஃபெலிக்ஸ் ராஜ் என்பவர்உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு:

தமிழக அரசின் புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்துள்ளேன். காப்பீட்டு நிறுவனத்துக்கு சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது. சாலை விபத்தில் காயமடைந்த எனது தந்தையின் மருத்துவ சிகிச்சைக்கான தொகை ரூ. 6 லட்சத்து 54,100-ஐ வழங்க கோரினேன்.

ஆனால், அரசு காப்பீட்டுத் திட்ட விதிகளின்படி, திருமணமான அரசு ஊழியரின் பெற்றோர், குடும்ப உறுப்பினர் என்ற வரம்புக்குள் வரமாட்டார்கள் எனக்கூறி எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இது சட்டவிரோதமானது. அரசுஊழியர்களுக்கு திருமணமானாலும் அவர்களின் பெற்றோரும் அவர்களைச் சார்ந்தே உள்ளனர். எனவே இதுதொடர்பான பிரிவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு கோரியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணை உயர் நீதிமன்ற நீதிபதி மும்முனேனி சுதீர்குமார் முன்பாக நடந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

திருமணமானாலும் அரசு ஊழியர்களின் பெற்றோரும் அவர்களைச் சார்ந்தே உள்ளதால் அவர்களுக்கு மருத்துவ காப்பீட்டுத் திட்ட பலன்களை வழங்க முடியாது என மறுக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.

எனவே தமிழக அரசு மனுதாரரின் விண்ணப்பத்தை மறுபரிசீலனை செய்து 8 வார காலத்தில் அவரது தந்தையின் மருத்துவத்துக்காக செலவு செய்துள்ள தொகையை திருப்பி வழங்க வேண்டும். மேலும், பெற்றோரை சேர்க்காமல்விலக்கிவைத்திருப்பது சட்டவிரோதமானது.

அரசு ஊழியர்களின் குடும்பஉறுப்பினர்கள் என்ற வரையறைக்குள் பெற்றோரையும் கொண்டு வருவது குறித்து 3 மாதங்களில் அரசின் தலைமைச் செயலாளர் முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in