Published : 09 May 2018 03:34 PM
Last Updated : 09 May 2018 03:34 PM

‘மழையில் முளைத்த காளான்’ - காலா பாடல்கள் காணாமல் போகும்: ஜெயக்குமார் காட்டம்

காலத்தால் அழியாத பாடல்கள் பல இருக்கும்போது காலா பாடல்கள் மழையில் முளைத்த காளான்கள் போல காணாமல் போகும் என, தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படத்தின் பாடல்கள் இன்று (புதன்கிழமை) வெளியானது. இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “மறைந்த முதல்வர் எம்ஜிஆர் தன்னுடைய திரைப்பட பாடல்களில் சமுதாய முன்னேற்றத்தை வலியுறுத்தினார்.

அவர் தன் பாடல்களில் மது, புகை பிடித்தது கிடையாது. சமுதாயத்துக்கான நல்ல கருத்துகளை திரைப்படங்கள் மூலம் தெரிவித்தவர் எம்ஜிஆர். சமுதாய சீர்திருத்தவாதியாக அவர் திகழ்ந்தார்.

சட்டம், ஒழுங்கு பிரச்சனையின்றி அமைதி தவழும் மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக சென்னை திகழ்கிறது. இந்நிலையில், திடீரென ஞானம் வந்தது ரஜினிகாந்த் விழித்தெழுந்தது போன்று பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளது அரசியல் ஆதாயத்துக்காகத் தான்.

கலவரத்தை தூண்டும் வகையில் உள்ள பாடல்களை ஏற்றுக்கொள்ள முடியாது. பாடல்கள் மூலம் தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடாது. காலா படத்தின் பாடல்கள் அமைதியை சீர்குலைக்கும் வகையில் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

காலத்தால் அழியாத பாடல்கள் பல இருக்கும்போது காலா பாடல்கள் மழையில் முளைத்த காளான்கள் போல காணாமல் போகும்” என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x