Published : 14 May 2018 04:55 PM
Last Updated : 14 May 2018 04:55 PM

காவிரிக்காக நல்லகண்ணு தலைமையில் மே 19-ம் தேதி முதல் கூட்டம்: கமல்ஹாசன் அறிவிப்பு

காவிரிக்காக விவசாய சங்கங்களுடன் இணைந்து மே 19-ம் தேதி முதல் கூட்டம் நடத்த இருப்பதாகத் தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.

காவிரி பிரச்சினை குறித்து விவசாய சங்கங்களுடன் இணைந்து இன்று ஆலோசனை நடத்தினார் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், “காவிரியில் நமது உரிமையை நிலைநாட்டுவதற்காக,  ஒரு விரிவான சந்திப்பை அனைத்து அமைப்புகளும் கலந்து விவாதித்தோம். அதன் அடிப்படையில், அனைத்து விவசாய அமைப்புகளின் ஆலோசனைப்படியும், பிற வல்லுநர்களின் வழிகாட்டுதல்படியும், காவிரியில் நமது உரிமைக்கான கூட்டத்தை ‘காவிரிக்கான தமிழகத்தின் குரல்’ என்கிற தலைப்பில் களம் காணவும், போராட்ட ஒற்றுமையை உருவாக்கவும் விரும்புகிறோம்.

அதற்கான முதல் கூட்டம், வருகிற மே 19-ம் தேதி காலை 10 மணி அளவில் சென்னை, பெரியமேட்டில் நடைபெறும். அனைத்து விவசாய சங்கங்கள் மற்றும் அமைப்புகள், அனைத்துக் கட்சிகள், நீர் மேலாண்மை வல்லுநர்கள், அக்கறையுள்ள பெருமக்கள், இளைஞர்கள், மாணவர்கள் என அனைவரையும் இருகரம் கூப்பி அழைக்கின்றோம்.

உணர்வுபூர்வமாகவும் உண்மையாகவும் காவிரிக்கான தமிழகத்தின் குரல் உயர வேண்டும். இந்தக் குரலின் உறுதியில், உரையாடலுக்கான கதவுகளும், மூடப்பட்ட அணைகளின் கதவுகளும் திறக்க வேண்டும். இது காவிரிக்கான தமிழகத்தின் குரல்.

படிப்படியாக நமது உரிமைகளை இழந்துகொண்டு வருகிறோம். இது அரசியல் விளையாட்டு. இதற்கு ஒரே வழி, அனைத்து விவசாயிகளும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால், இது மக்களின் பிரச்சினை என்பதால், கட்சிகளின் வரைகோடுகளைத் தாண்டி எல்லோரும் ஒன்றாக தமிழர்கள் என்ற ஒரு குடையின்கீழ் நிற்க வேண்டும். இதில் யார் முதன்மை என்பது இல்லை. நல்லகண்ணு ஐயா தலைமையில் இது நடைபெற இருக்கிறது. இது விழா அல்ல, ஒரே நாளில் முடிந்து விடுவதற்கு. தொடர்ந்து நடக்கப் போகும் உரையாடல்” என்றார் கமல்ஹாசன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x