Last Updated : 16 May, 2018 12:06 PM

 

Published : 16 May 2018 12:06 PM
Last Updated : 16 May 2018 12:06 PM

பிளஸ் 2 தேர்வு; புதுச்சேரி தேர்ச்சி விகிதம் 0.64 சதவீதம் மட்டுமே அதிகரிப்பு: மாணவிகளே அதிக தேர்ச்சி

புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் கடந்தாண்டை விட 0.64 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. மாணவிகளே அதிகளவு தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் நாராயணசாமி உறுதி தந்தார்.

இதுதொடர்பாக முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது:

‘’புதுச்சேரியில் கடந்த மார்ச் 2018ல் நடைபெற்ற 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 6,987 மாணவர்களும், 8,088 மாணவிகளும் என மொத்தமாக 15,075 மாணவர்கள் தேர்வு எழுதினர். அதில் 13,163 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 87.32 சதவீதம் ஆகும். இது கடந்த ஆண்டை விட 0.64 சதவீதம் அதிகம்.

தேர்வு எழுதியோரில் ஆண்கள் 83.61 சதவீதமும், பெண்கள் 90.52 சதவீதமும் தேர்ச்சி பெற்றனர். புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் 51 பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. அதில் ஒரு பள்ளி மட்டுமே அரசுப் பள்ளி.

புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் மொத்தம் 327 பேர் நூறு சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ளனர். வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவு தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் தேர்ச்சி எண்ணிக்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வித்துறை அதிகாரிகளை ஒருங்கிணைத்து குழு அமைக்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டில் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும்'' என்று குறிப்பிட்டார்.

பேட்டியின்போது கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x