

உளுந்தூர்பேட்டை அருகே சுங்கச்சாவடி தாக்கப்பட்ட வழக்கில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனத் தலைவர் வேல்முருகனை விழுப்புரம் மாவட்ட போலீஸார் கைது செய்தனர்.
தூத்துக்குடியில் நடந்த கலவரத்தில் காயமடைந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் பார்த்து ஆறுதல் கூறுவதற்காக, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் வெள்ளிக்கிழமை மாலை விமானம் மூலம் தூத்துக்குடி வாகைக்குளத்திலுள்ள விமான நிலையத்துக்கு வந்தார். மாலை 3 மணியளவில் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த அவரை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
“உங்களை உள்ளே அனுமதித்தால் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, நகருக்குள் செல்ல வேண்டாம்” என தடுத்தனர். ஆனால், மீறி செல்ல முயன்றதையடுத்து வேல்முருகன் உள்ளிட்ட 9 பேரை போலீஸார் கைது செய்து, புதுக்கோட்டை- சாயர்புரம் சாலையிலுள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
துப்பாக்கிச் சூடைக் கண்டித்து போராட்டம் நடத்திய வேல் முருகனை தூத்துக்குடி போலீஸார் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தவரை விழுப்புரம் மாவட்ட போலீஸார் கைது செய்து திருக்கோவிலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். வேல்முருகனை சென்னை புழல் சிறையில் 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம வேல்முருகன் கூறியதாவது,
“பிரதமர் மோடி தமிழக வருகையைக் கண்டித்தும், ஸ்டெர்லைட் போராட்டத்தைக் கண்டித்தும் போராடியதற்கு பழிவாங்கும் விதமாகவே இந்த கைது நடவடிக்கை” என்றார்.
புழல் சிறைக்கு வேல்முருகனை போலீஸார் கொண்டு செல்லும் வழியான மடப்பட்டில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் சமாதானப்படுத்தி வேல் முருகனை சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.