Published : 14 May 2018 08:21 AM
Last Updated : 14 May 2018 08:21 AM

எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை: பாஜக தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தமிழிசை தகவல்

பெண் பத்திரிகையாளர்கள் மீது அவதூறு பரப்பியது தொடர்பாக எஸ்.வி.சேகர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பாஜக மேலிடத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியது: மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை மக்கள் விரும்பாவிட்டால் இத்திட்டங்கள் நிறுத்தப்படும். கெயில் திட்டப் பணிகள் 91 சதவீதம் முடிந்துவிட்டது. இருப்பினும் மக்கள் எதிர்ப்பதால் திட்டத்தை கைவிட முடிவெடுக்கப்பட்டுள்ளது.

பெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறாக கருத்து வெளியிட்ட எஸ்.வி.சேகர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பாஜக தலைமைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த பரிந்துரை அடிப்படையில் கட்சி மேலிடம் முடிவு செய்யும் என்றார்.

இதேபோன்று கோவில்பட்டி அருகே ஊத்துப்பட்டியில் பேசிய அவர், “2013-ல் ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு அதிமுக அரசு சொன்னதால், உச்ச நீதிமன்றத்தில் ஆலை நிர்வாகம் முறையிட்டது. ரூ.100 கோடி அபராதத்துடன் ஆலை திறக்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூடிய தகுதி மத்திய, மாநில அரசுகளுக்கு இல்லை. உச்ச நீதிமன்றத்துக்குத்தான் உள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x