அரசு கல்வெட்டுகளில் கட்சியினர் பெயர் இடம்பெற தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

அரசு கல்வெட்டுகளில் கட்சியினர் பெயர் இடம்பெற தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு
Updated on
1 min read

மதுரை: அரசு திட்டங்களின் கல்வெட்டுகளில் அரசியல் கட்சியினர் பெயர் இடம் பெற தடை கோரிய மனுவை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.

புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பலூரைச் சேர்ந்த ஆறுமுகம், உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், “அரசின் திட்டங்கள், கட்டுமானங்கள், நலத்திட்டங்கள் அரசியல் கட்சியினர் அல்லது அரசு அலுவலர்களால் தொடங்கி வைக்கப்படுகிறது. ஒவ்வொரு தொகுதியிலும் மக்களின் நலனுக்காக பள்ளி கட்டிடங்கள், கழிவறைகள், பேருந்து நிறுத்தங்கள், சமுதாய நலக்கூடங்கள் அமைக்கப்படுகிறது. இவ்வாறு அரசு நிதியில் கட்டப்படும் கட்டிடங்களுக்கு ஊழல் செய்த அரசியல் கட்சித் தலைவர்களின் பெயர்கள் சூட்டப்படுகின்றன. நலத்திட்டத்துக்கான பணத்தை சொந்த வளர்ச்சிக்காக பயன்படுத்தும் அரசியல்வாதிகளின் பெயர்களை அரசு திட்டங்களுக்கு சூட்டுவது சரியல்ல.

அரசு நிதியில் கட்டப்படும் கட்டிடங்களில் அரசின் சின்னத்துக்கு மாற்றாக, அரசியல்வாதிகளின் பெயர்களும், புகைப்படங்களும் இடம்பெறுகின்றன. ஒரு ஆட்சியில் இருந்து இன்னொரு ஆட்சி மாறும்போது பெயர்கள், புகைப்படங்கள் மாற்றப்படுகின்றன. இதனால் அரசுக்கு தேவையற்ற நிதி இழப்பு ஏற்படுகிறது. எனவே, அரசின் நலத்திட்டங்கள் தொடர்பான கல்வெட்டுகளில் தமிழக அரசின் சின்னம், பணி விவரங்கள், ஒப்பந்ததாரரின் பெயர் மட்டும் இடம்பெறவும், அரசியல் கட்சி அல்லது கட்சி தலைவர்களின் பெயர்கள் இடம் பெறுவதை தவிர்க்கவும் உத்தரவிட வேண்டும்,” எனக் கோரியிருந்தார்

இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி. அருள்முருகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “மனுதாரர் விளம்பர நோக்கத்துடன் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். மனுதாரர் மனுவை திரும்ப பெறத் தவறினால் அதிக அளவில் அபராதம் விதிக்கப்படும்” எனத் தெரிவித்தனர். இதையடுத்து, மனுதாரர் தரப்பில் மனுவை திரும்பப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. அதற்கு அனுமதி வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in