Published : 03 Jul 2024 04:51 AM
Last Updated : 03 Jul 2024 04:51 AM

சென்னை சாலையில் தீப்பற்றி எரிந்த மாநகர பேருந்து: அசம்பாவிதம் தவிர்ப்பு

சென்னை அடையாறு எல்.பி.சாலையில் தீப்பற்றி எரிந்த மாநகர பேருந்து

சென்னை: சென்னை சாலையில் நேற்று தீப்பற்றி எரிந்த மாநகரப் பேருந்தால் பரபரப்பு ஏற்பட்டது. அதில் இருந்த பயணிகள் உடனடியாக இறக்கிவிடப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் பிராட்வே - சிறுசேரிக்கு 102 என்னும் வழித்தட எண் கொண்ட பேருந்துஇயக்கப்படுகிறது. இந்த பேருந்து நேற்று பிற்பகல் 2 மணியளவில் பிராட்வேயில் இருந்து சிறுசேரிக்கு புறப்பட்டது.

அடையாறு எல்.பி.சாலை அருகே சென்றபோது பேருந்தின் என்ஜினில் இருந்து புகை வந்துள்ளது. இதை பார்த்த ஓட்டுநரும், நடத்துநரும் பேருந்தை சாலையோரம் நிறுத்தி, பயணிகளை அவசரமாக கீழே இறக்கிவிட்டனர்.

இதற்கிடையே, லேசாகப் பற்றிய தீ படிப்படியாக பேருந்து முழுவதும் பரவியது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பேருந்தில் இருந்து குறிப்பிட்ட தொலைவில் இரண்டு புறமும் தடுப்புகள் அமைத்து, பொதுமக்கள் யாரும் அருகே வராதவாறு காவல்துறையினர் கவனித்துக் கொண்டனர். இந்நிலையில், விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

இதுதொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தனியார் நிறுவனம் மூலம் சிஎன்ஜியால் (அழுத்தப்பட்ட இயற்கைஎரிவாயு) இயங்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்ட மாநகர பேருந்து 102 வழித்தடத்தில்,கடந்த 28-ம் தேதி முதல் இயங்கி வருகிறது. அந்த வகையில் நேற்று பிற்பகல்அடையாறு பணிமனை அருகே சென்றபோது என்ஜினில் புகை வருவதைப் பார்த்து ஓட்டுநரும், நடத்துநரும் பயணிகளை பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இறக்கிவிட்டனர்.

காவல் துறை மற்றும் தீ அணைப்புதுறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் உதவியுடன் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டு அருகில் இருந்த அடையாறு பணிமனைக்கு பேருந்து பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டது. பொதுமக்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் டீசலுக்கு மாற்றாக சிஎன்ஜி (அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு), எல்என்ஜி (திரவ இயற்கை எரிவாயு) எனப்படும்இயற்கை எரிவாயு மூலம் பேருந்துகளைஇயக்க தமிழக அரசு முடிவு செய்தது.இதன் தொடர்ச்சியாக மாநகர போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட நிறுவனங்களில் சிஎன்ஜி, எல்என்ஜி பேருந்துகள் சோதனை முயற்சியாக இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x