Published : 10 May 2018 07:55 AM
Last Updated : 10 May 2018 07:55 AM
இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கு தொடர்பாக கோவையில் மேலும் 6 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
கோவை இந்து முன்னணி செய்தித் தொடர்பாளராக இருந்தவர் சசிகுமார் (38). இவர் 2016 செப்.22-ம் தேதி இரவு துடியலூர் அடுத்துள்ள சுப்பிரமணியம்பாளையத்தில் தனது வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தபோது மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். துடியலூர் போலீஸாரிடம் இருந்து இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. பின்னர், கொலையில் தொடர்புடையதாக சாய்பாபாகாலனியைச் சேர்ந்த முபாரக் (35), ரத்தினபுரியைச் சேர்ந்த சதாம் உசேன் (27), உக்கடத்தைச் சேர்ந்த சுபைர் (33), போத்தனூரைச் சேர்ந்த சையது அபுதாஹிர் (32) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கணபதி பகுதியைச் சேர்ந்த ஹக்கீம் என்பவரது கொலைக்கு பழிவாங்கும் வகையில் சசிகுமார் கொலை செய்யப்பட்டார் என விசாரணையில் தெரியவந்ததாக சிபிசிஐடி போலீஸார் தெரிவித்திருந்தனர்.
தேடப்பட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுவிட்ட நிலையில், கடந்த ஜனவரி மாதம் இந்த வழக்கு திடீரென தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மாற்றப்பட்டது. அதன் அடிப்படையில், என்ஐஏ அதிகாரிகள் கோவையில் முகாம் அமைத்து விசாரித்து வருகின்றனர். 4 பேரின் வீடுகளிலும் மார்ச் 18-ம் தேதி சோதனை நடத்தப்பட்டது.
அடுத்தகட்டமாக, சசிகுமார் கொலையில் தொடர்புடையதாக மேலும் சிலரிடம் என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது. அமைப்புரீதியாக செயல்படும் சிலரை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில், வழக்கில் குறிப்பிடாத நபர்கள் 5 பேரின் வீடுகளில் நேற்று காலை என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். செல்வபுரத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் வீடு, உக்கடம் ஜிஎம் நகர் பிலால் எஸ்டேட்டில் உள்ள ஒருவரது வீடு, கண்ணப்ப நகரில் உள்ள அந்த நபரின் ஒர்க் ஷாப், குனியமுத்தூர் சுகுணாபுரத்தில் ஒருவரது வீடு, துடியலூர் சேரன் நகரில் ஒரு வீடு, வெள்ளக்கிணறு பிரிவில் ஒருவரது வீடு என அடுத்தடுத்து 6 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. 30-க்கும் மேற்பட்ட என்ஐஏ அதிகாரிகள் தனித்தனி குழுக்களாக சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையின்போது செல்போன், லேப்டாப் உள்ளிட்டவற்றை கைப்பற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது. கோவை மாநகர, மாவட்ட போலீஸார் சோதனையின்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
காவல் ஆணையரிடம் புகார்
இதனிடையே, என்ஐஏ அதிகாரிகளால் சோதனை நடத்தப்பட்ட நபர்கள், அவர்கள் குடும்பத்தினர் நேற்று கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். சோதனை என்ற பெயரில் என்ஐஏ அதிகாரிகள் துன்புறுத்துவதாகவும், அவர்களிடம் இருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டுமெனவும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
நேற்று சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட செல்வபுரத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர், என்ஐஏ அதிகாரிகள் தன்னை துன்புறுத்துவதாக கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த வாரம் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT