Published : 11 May 2018 07:45 AM
Last Updated : 11 May 2018 07:45 AM
ரம்ஜான் நோன்பு கஞ்சி தயாரிக்க தமிழகத்தில் உள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களுக்கு 5,145 டன் அரிசிக்கான அனுமதியை தமிழக அரசு வழங்கியுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க தேவையான அனுமதியை கடந்த 2001-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். அதன்படி, பள்ளிவாசல்களுக்கு தேவை யான அரிசி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு நோன்பு தொடங்கும் முன்னரே அரிசி வழங்குமாறு இஸ்லாமிய மக்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்தன. இதை ஏற்று, அரிசிக்கான அனுமதியை வழங்க முதல்வர் கே.பழனிசாமி உத்தரவிட்டார். இதையடுத்து பள்ளிவாசல்களுக்கு தேவையான அரிசியை வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி, 5,145 டன் அரிசி பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படுகிறது. இதனால் அரசுக்கு ரூ.12 கோடியே 97 லட்சம் கூடுதல் செலவு ஏற்படும். தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் பயனடையும்.
Sign up to receive our newsletter in your inbox every day!