Published : 20 Aug 2014 11:50 AM
Last Updated : 20 Aug 2014 11:50 AM

சில்லறையை சிதறவிட்டு பஸ்ஸில் 27 பவுன் பறிப்பு: மர்ம நபர்கள் மூவரை தேடுகிறது காவல் துறை

கரூர் மாவட்டம் குளித்தலையில் ஓடும் பேருந்தில் சில்லறையை சிதறவிட்டு கவனத்தை திசைதிருப்பி பெண்ணிடம் இருந்து 27 பவுன் நகைகளைப் பறித்துக்கொண்டு தப்பிய நபர்களை போலீஸார் தேடுகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் சன்னாநல்லூரை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(61). அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் டிக்கெட் செக்கராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ரேவதி(51). இவர்களின் மகன் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வரும் மணிசங்கருக்கு சமீபத்தில் திருமணமானது.

ஆடி மாதம் முடிந்ததால் பெருந்துறையில் குடிவைப்ப தற்காக, தாய்வீடு சென்றிருந்த மருமகள் ரத்தினவள்ளியை அழைத்துக்கொண்டு கோவிந்தராஜும், ரேவதியும் திருவாரூரில் இருந்து செவ்வாய்க்கி ழமை பெருந்துறைக்குப் புறப்பட்டனர்.

திருச்சி வந்து அங்கிருந்து ஈரோடு செல்லும் அரசு பஸ்ஸில் ஏறினர். வாந்தி வருவதாக முதியவர் ஒருவர் கூறியதால் ஏற்கெனவே அமர்ந்திருந்த சீட்டை விட்டு மாறி மாறி அமர்ந்தனர்.

பேட்டைவாய்த்தலையில் அந்த பஸ்ஸில் ஏறிய மூவர் இவர்கள் அமர்ந்திருந்த இருக்கைகளின் பின்னால் அமர்ந்து வந்தனர்.

குளித்தலை பெரிய பாலம் அருகே பஸ் வந்தபோது அவர்கள் சில்லறைகளை கீழே சிதறவிட்டுவிட்டு கோவிந்தராஜ், ரேவதி, ரத்தினவள்ளியிடம் சில்லறை கீழே விழுகிறது எடுங்கள் எனக் கூறியுள்ளனர்.

ரத்தினவள்ளி சில்லறைகளை சேகரிக்கும்போது அவர் கையில் வைத்திருந்த பையைக் கொடுங்கள் நான் வைத்துக்கொள்கிறேன். நீங்கள் சில்லறையை எடுங்கள் என மூவரில் ஒருவர் கூறியுள்ளார். ரத்தினவள்ளி பையைக் கொடுக்க மறுக்கவே பையைப் பிடுங்கிய மர்ம நபர்கள், அதிலிருந்த 27 பவுன் நகைகளை எடுத்துக்கொண்டு குளித்தலை பேருந்து நிலையத்துக்கு முன்பிருந்த வேகத்தடை அருகில் கீழே குதித்து தப்பி ஓடிவிட்டனர்.

இந்நிலையில் வாந்தி வருவதாகக் கூறி இடம் மாற்றி பஸ்ஸில் உட்காரச் செய்த முதியவர் மீது சந்தேகம் ஏற்படவே அவரை குளித்தலை போலீஸில் ஒப்படைத்ததுடன் நகைகள் பறிபோனது குறித்து புகார் அளித்தனர்.

காவல் ஆய்வாளர் பிச்சை பாண்டியன் வழக்கு பதிவு செய்து தப்பிய மூவரை தேடி வருகிறார். சந்தேகத்துக்கிடமான வகையில் நடந்துகொண்ட முதியவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

ஓடும் பஸ்ஸில் பெண்ணிடம் 27 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x