

சென்னை: தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு. வேளாண் துறையில் காலியாக உள்ள வேளாண்மை அலுவலர் மற்றும் தோட்டக்கலை அலுவலர் பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக கடந்த 2023-ம் ஆண்டு தேர்வு நடத்தப்பட்டது.
இதன் மூலம் 85 தோட்டக்கலை அலுவலர்கள் மற்றும் 48 வேளாண்மை அலுவலர்கள் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு, பணி நியமன ஆணைகளை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
புதிதாக அரசுப் பணிக்கு தேர்வுசெய்யப்பட்டு, பணிநியமன ஆணைகளை பெற்றுக் கொண்ட தோட்டக்கலை மற்றும் வேளாண் அலுவலர்கள் இப்பணியிடங்களுக்கு முறையாக தேர்வு நடத்தி, குறிப்பிட்ட காலத்துக்குள் முடிவுகளை வெளியிட்டு, பணிநியமன ஆணைகள் வழங்கியதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தலைமைச் செயயலர் சிவ் தாஸ் மீனா, வேளாண் துறை செயலர் அபூர்வா, துறையின் சிறப்பு செயலர்பொ.சங்கர், வேளாண் இயக்குநர் பா.முருகேஷ், தோட்டக்கலைத் துறை இயக்குநர் பெ.குமாரவேல் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.