

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று சுகாதாரத் துறையின் அறிவிப்புகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
சென்னை கிண்டியில் உள்ளகலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை வளாகத்திலும், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி ராசா மிராசுதார் மருத்துவமனையிலும் குழந்தைகளுக்கான உயர் சிறப்பு பன்னோக்கு மருத்துவமனை ரூ.250 கோடியில் நிறுவப்படும்.
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ், 6 மண்டல ஆராய்ச்சி மையங்கள் ரூ.16 கோடியில் நிறுவப்படும். புற்றுநோய்க்கு ஆரம்பநிலையிலேயே சிகிச்சையளிக்கும் திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் ரூ.27 கோடியில் விரிவுபடுத்தப்படும்.
மேலும், தொடர்ந்து பச்சிளம் குழந்தையின் வளர்ச்சி மற்றும் நலத்தை கண்காணிக்க சிறப்பு மையங்கள் நடத்தப்படும். குறைப்பிரசவம் மற்றும் எடை குறைவான பச்சிளம் குழந்தைகளை தொடர்ந்து அவர்களது இல்லங்களிலேயே தொழில்நுட்ப உதவியோடு கண்காணிப்பதற்கான முன்னோடித் திட்டம் ரூ.1.28 கோடியில்7 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்.
நீரிழிவு நோயினால் ஏற்படும்பாத பாதிப்புகளை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து, கால் இழப்பினைத் தடுப்பதற்கான ஒருங்கிணைந்த பாதம் பாதுகாப்போம் திட்டம் ரூ.26.62 கோடியில் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும். மருத்துவமனைகளுக்கு ரூ.101 கோடி மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படும்.
சென்னை அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகத்தில் ரூ.18.13 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். மலைவாழ் மக்களுக்கு அவசர மருத்துவ சேவைகளை அளிக்கும் வகையில் இரு சக்கர அவசரகால மருத்துவ வாகனங்கள் ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.
நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 50 படுக்கைகள் கொண்ட தனிப் பிரிவு,4 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மகப்பேறு காத்திருப்பு அறைகள் மற்றும் இதர வசதிகள் ரூ.1.08 கோடி ஏற்படுத்தப்படும்.
போக்குவரத்துத் துறை ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் இதர பொது வாகன ஓட்டுநர்களுக்கு, விபத்து மற்றும் அவசர காலங்களில் வழங்க வேண்டிய உயிர்காக்கும் முதலுதவி சிகிச்சை குறித்த பயிற்சி வழங்கப்படும்.
அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் “முதியோர் பராமரிப்பு சேவை உதவியாளர்” என்ற புதிய சான்றிதழ் படிப்பு தொடங்கப்படும். உயிர்காக்கும் எடைக் குறைப்பு அறுவை சிகிச்சைசென்னை ஸ்டான்லி, கோயம்புத்தூர் மற்றும் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் வழங்கப்படும்.
மாவட்டந்தோறும் போதை மீட்பு மையங்கள் மற்றும் முகாம்கள்மூலமாக சமூக அளவிலான விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை சேவைகள், குழு மற்றும் தனிநபர் மனநல ஆலோசனைகள், போதை மீட்பு சிகிச்சை வழங்கப்பட்டு உரிய மறுவாழ்வு சேவைகள் அளிக்கப்படும் என மொத்தம் 110 அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.