Published : 14 May 2018 09:25 AM
Last Updated : 14 May 2018 09:25 AM
திரைப்பட இயக்குநர் பாரதிராஜா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது பழிவாங்கும் செயல் என கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் சென்னை, வடபழனியில் நடைபெற்ற படவிழா ஒன்றில் இயக்குநர் பாரதிராஜா கலந்து கொண்டார். அதில், ஆண்டாள் குறித்து கருத்து தெரிவித்த கவிஞர் வைரமுத்துவுக்கு ஆதரவாகப் பேசிய அவர் ஆயுதம் எடுப்போம் என்றும், விநாயகரை இறக்குமதி செய்யப்பட்ட கடவுள் என பேசியதாகவும் இந்து அமைப்பு சார்பில் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் உயர் நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம் முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது.
அதைத் தொடர்ந்து பாரதிராஜா மீது இரு பிரிவுகளில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் வைரமுத்து ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், “பாரதிராஜா மீது வழக்கு பழிவாங்கும் செயலாகும். வழக்கு பெரிதல்ல; ரப்பர் மரத்துக்கு ரணங்கள் புதிதல்ல. அவரை நாங்கள் சட்டப்படி மீட்டெடுப்போம்” என பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT