Published : 19 May 2018 07:55 AM
Last Updated : 19 May 2018 07:55 AM

காவிரி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம்: தமிழிசை, மன்னார்குடி ரெங்கநாதன், பி.ஆர்.பாண்டியன் கருத்து

காவிரி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை, காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் மன்னார்குடி ரெங்கநாதன் , அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக தமிழிசை விடுத்துள்ள அறிக்கை: காவிரிப் பிரச்சினையில் மத்திய பாஜக அரசின் வரைவுத் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த வரைவுத் திட்டம் உச்சநீதிமன்றம் கடந்த பிப்.16-ம் தேதி அளித்த தீர்ப்பின் அடிப்படையிலும், மாநிலங்களுக்கான நதிநீர் பங்கீடு திட்டத்தின் படியும் தயாரிக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வரவேற்கத்தக்கது.

திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மறுக்கப்பட்ட தமிழகத்தின் காவிரி உரிமை பாஜக ஆட்சியில் மீட்டெடுக்கப்பட்டு இருக்கிறது.

பல ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது தீர்வை தராமல் தாமதப்படுத்தியவர்கள், நியாயமான காரணங்களைச் சொல்லி பாஜக அவகாசம் கேட்டபோது, தங்கள் தவறை மறைக்க பாஜகவுக்கு எதிராக போராட்டங்களை நடத்தினார்கள்.

கருப்புக் கொடி காட்டினார்கள். பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது அவமானப்படுத்தினார்கள். அந்தக் கட்சிகள் இப்படி நடந்து கொண்டதற்கு தலைகுனிய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மன்னார்குடி ரெங்கநாதன்

காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாகவும், இவ்வழக்கில் நியாயம் கிடைத்ததற்கு தமிழகம் நேர்மையாக செயல்பட்டதே காரணம் என்றும் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் மன்னார்குடி ரெங்கநாதன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மன்னார்குடியில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: காவிரி வழக்கில் இத்தனை ஆண்டு காலம் தமிழகம் நேர்மையாகவும், உண்மையாகவும் செயல்பட்டு வந்த விதமே தற்போது நியாயம் கிடைத்துள்ளதற்கு அடிப்படை யாக அமைந்துள்ளது.

இந்த தீர்ப்பு கிடைத்திருப்பதற்கு தமிழக மற்றும் கர்நாடக காவிரிப் படுகை மக்களுக்கும், விவசாயிகளுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மத்திய அரசு உடனடியாக இந்த தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டு காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து 4 மாநிலங்களுக்குமான நீர் பங்கீடு முறையாக நடைபெற வழிவகை செய்ய வேண்டும் என்றார்.

பி.ஆர்.பாண்டியன்

அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை: உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன். காவிரி விவகாரத்தில் ஒருமித்த கருத்தோடு உறுதியோடு போராடி சட்ட அங்கீகாரம் பெற்றுக் கொடுத்த முதல்வர் கே.பழனிசாமி, எதிர்கட்சி உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகள், வணிகர்கள், விவசாய அமைப்புகள், தமிழகத்தின் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர்கள், ஊடகங்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x