Published : 15 May 2018 08:42 PM
Last Updated : 15 May 2018 08:42 PM

சென்னையில் துணிகரம்: ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி

தவறான தொடர்பு காரணமாக தனது ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவியை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை அண்ணாநகர் கிழக்கு விஓசி காலனியில் வசித்தவர் கோபி (25). இவருக்கு கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன் சுமித்ரா (21) என்ற பெண்ணுடன் திருமணம் ஆனது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தையும், 8 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

கோபி கீழ்ப்பாக்கம் கார்டன் பகுதியில் உள்ள ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தில் கார் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். இவர் தனது தாய் மற்றும் மனைவியுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று தனது நண்பர் கலைச்செல்வன் என்பவருடன் ஒன்றாக மது அருந்திய கோபி பின்னர் இரவு 7 மணி அளவில் வீட்டுக்குத் திரும்பியுள்ளார். பின்னர் உறங்கி விட்டார். அதன் பின்னர் சுமித்ரா தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு பக்கத்து தெருவில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

பின்னர் இரவு 9.30 மணி அளவில் கோபியின் தாயார் வீட்டுக்குத் திரும்பினார். அப்போது வரும்போதே சுமித்ராவையும் உடன் அழைத்து வந்துள்ளார். வீட்டுக்குள் வந்து பார்த்தபோது கோபி கைகால் விரைத்த நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்த சுமித்ரா நான் போகும் போது நன்றாகத்தானே உறங்கிக்கொண்டிருந்தார் என்று அழுதபடி கணவன் கோபியை எழுப்பியுள்ளார்.

ஆனால் கோபியின் உடலில் அசைவு எதுவும் இல்லை என்றவுடன் உடனடியாக அருகில் உள்ள கோபியின் நண்பர்கள் சந்தோஷ் மற்றும் சேகர் ஆகியோர் உதவியுடன் ஆட்டோவில் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது மருத்துவர்கள் கோபியை பரிசோதித்துப் பார்த்துள்ளனர். கோபி ஏற்கெனவே இறந்து போனது தெரிய வந்தது. அவரின்  கழுத்தில் காயம் இருப்பதைப் பார்த்து சந்தேகமடைந்த மருத்துவர்கள் கோபியின்  உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி விட்டு டி.பி. சத்திரம் போலீஸுக்கும் தகவல் அளித்தனர்.

போலீஸார் கோபியின் தாய் மற்றும் மனைவி சுமித்ராவிடம் விசாரித்தனர். அப்போது சுமித்ரா அழுதபடி 'நன்றாகத்தான் வந்து வீட்டில் படுத்தார்' என்று கூறியுள்ளார். போலீஸார் விசாரணையில் கோபி கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் கோபியின் மனைவி சுமித்ராவை துருவித் துருவி விசாரித்தனர்.

விசாரணையின் முடிவில் சுமித்ரா கோபியை தனது நண்பருடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

விசாரணையில் சுமித்ரா கூறியுள்ளதாவது:

''கோபிக்கு மதுப்பழக்கம் அதிக அளவில் இருந்தது. அவரது நண்பர் கலைச்செல்வனுடன் சேர்ந்து குடித்துவிட்டு வீட்டுக்கு வருவது வழக்கம். இதில் கோபி சுமித்ரா உறவில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சுமித்ராவுக்கும் கலைச்செல்வனுக்கும் தவறான உறவு ஏற்பட்டுள்ளது. கோபி இல்லாத சமயங்களில் இருவரும் சந்தித்து வந்துள்ளனர்.

சுமித்ராவுடன் உறவைத் தொடர வேண்டும் என்பதற்காகவே கலைச்செல்வன் கோபிக்கு அதிக அளவில் மது வாங்கில் கொடுத்து அவரை போதைக்கு அடிமையாக்கி உள்ளார். போதையில் கோபி மயக்கமாக இருக்க இவர்கள் உறவு தொடர்ந்துள்ளது. இதை ஒருநாள் கோபி யதேச்சையாக கவனித்துவிட கோபமடைந்தவர் சுமித்ராவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அதன் பின்னரும் இருவர் தொடர்பும் தொடர்ந்ததால் சுமித்ராவைக் கண்டிக்க பிரச்சினை காவல் நிலையம் வரை சென்று போலீஸார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர். அதன் பிறகு கலைச்செல்வனும், சுமித்ராவும் தாங்கள் திருந்திவிட்டது போல் காண்பித்து கோபியை நம்ப வைத்துள்ளனர்.

இதை கோபி நம்பி கலைச்செல்வனுடன் மீண்டும் நட்பைத் தொடர்ந்துள்ளார். ஆனால் சுமித்ரா, கலைச்செல்வனால் தொடர்பை விட முடியவில்லை. அதற்கு தடையாக கோபி இருப்பதால் கணவன் கோபியைக் கொன்றுவிட்டால் தடையின்றி இருவரும் வாழலாம் என்று சுமித்ரா கூற அதை செயல்படுத்தியுள்ளனர்.

நேற்று வழக்கம் போல் பணி முடிந்து வந்த கோபியை மதுக்கடைக்கு அழைத்துச் சென்ற கலைச்செல்வன் அளவுக்கதிமாக மது வாங்கிக் கொடுத்துள்ளார். போதையில் வீட்டுக்கு அழைத்து வந்து படுக்கவைத்த பின் துண்டை வைத்து கோபியின் கழுத்தை இறுக்கி கலைச்செல்வன் கொலை செய்துள்ளார்.

கோபி உயிரிழந்ததும் ஒன்றும் அறியாதது போல் கலைச்செல்வன் சென்றுவிட சுமித்ராவும் தனது தாய் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்று விட்டார். பின்னர் அவரது தாயுடன் வந்து பார்த்து கணவர் உயிரிழந்ததை பார்த்து அழுது நடித்துள்ளார்.

கட்டிய கணவனை மூன்றே ஆண்டுகளில் தவறான நட்பு காரணமாக ஆண் நண்பருடன் சேர்ந்து கொலை செய்த மனைவி சுமித்ராவின் நடவடிக்கையைப் பார்த்து போலீஸாரே அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். கோபியை கொலை செய்த கலைச்செல்வன், சுமித்ரா இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x